காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் அறிவிப்பு
ஸ்ரீலங்காவின் 77ஆவது சுதந்திரதினமான பெப்ரவரி மாதம் 4ஆம் திகதியை வடமாகாணத்தின் கரிநாளாகக் கடைப்பிடிக்க முன்வருமாறு காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நேற்று அழைப்பு விடுத்துள்ளனர்.
வடக்கு – கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவினர்களுக்கான சங்கத்தினர் இது தொடர்பில் யாழ்ப்பாணத்தில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்ததாவது:
காணாமலாக்கப்பட்ட எமது உறவினர்களுக்கு நீதிகோரி பல வருடங்களாக நாங்கள் தொடர்ச்சியான போராட்டங்களை நடத்தி வருகின்றோம். ஆனால், இதுவரை எந்தத் தீர்வும் கிடைக்கப்பெறவில்லை. 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட எமது உறவுகள் காணாமலாக்கப்பட்ட நிலையில், அவர்களைத் தேடியலைந்த 300க்கும் அதிகமான தாய்மார் உயிரிழந்து விட்டனர். இறுதிவரை அவர்களால் தமது பிள்ளைகளைக் காணவே முடியவில்லை. ஆனால், 'தீர்வு தருகின்றோம்' என்று கூறி ஆட்சிக்கு வந்த அரசுகள் ஒவ்வொன்றும் எம்மைத் தொடர்ச்சியாக ஏமாற்றியே வருகின்றன.
தற்போதைய அரசாங்கமும்கூட காணாமலாக்கப்பட்ட உறவுகளின் விடயத்தில் மெத்தனப் போக்குடன் செயற்படுகின்றது. எனவே, காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்கு நீதிகோரியும், உறவுகளுக்கு என்ன நடந்தது? என்பதை வெளிப்படுத்துமாறு வலியுறுத்தியும் பெப்ரவரி மாதம் 4ஆம் திகதியை கரிநாளாகக் கடைப்பிடிக்க முன்வருமாறு நாம் அழைப்பு விடுக்கின்றோம். அன்றையதினம் வடக்கு – கிழக்கில் இடம்பெறும் போராட்டங்களில் கலந்துகொள்ளுமாறு பொதுமக்களை நாம் அன்புரிமையுடன் கேட்டுக் கொள்கின்றோம் - என்றனர்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.