மத்திய அமெரிக்காவில் ஹோண்டுராஸ் நாட்டின் ரோடான் தீவில் இருந்து புறப்பட்ட சிறிய விமானம் ஒன்று கடலில் விழுந்து விபத்துக்குள்ளானதில், பிரபல இசைக்கலைஞர் ஆரேலியோ மார்டினெஸ் உட்பட 12 பேர் உயிரிழந்தனர்.
இந்த விமானம், லான்ஸா ஏர்லைன்ஸுக்கு சொந்தமானது மற்றும் லா சீபா நகரத்தை நோக்கி சென்று கொண்டிருந்தபோது, புறப்பட்ட சில நொடிகளிலேயே "ரன்வேயின் வலது பக்கமாக திடீரென திரும்பி கடலில் விழுந்தது" என்று ஹோண்டுராஸ் சிவில் விமான போக்குவரத்து அதிகாரி கார்லோஸ் படில்லா தெரிவித்தார்.
இந்த விபத்து கடந்த 17 ஆம் திகதி இரவு 6:18 மணியளவில் (உள்ளூர் நேரம்) நிகழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
விமானத்தில் 15 பயணிகள் மற்றும் 2 பணியாளர்கள் உட்பட மொத்தம் 17 பேர் இருந்தனர். இதில் 5 பேர் கடலில் இருந்து மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர், ஆனால் ஒருவர் இன்னும் காணவில்லை என்று தீயணைப்பு துறை தெரிவித்துள்ளது.
விபத்திற்கு "இயந்திர கோளாறு" காரணமாக இருக்கலாம் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆரேலியோ மார்டினெஸ், 55 வயதான கரிஃபுனா இசைக்கலைஞர், பாடகர், கிதார் கலைஞர் மற்றும் தாளவாத்திய கலைஞராக மத்திய அமெரிக்காவில் பிரபலமானவர்.
அவர் கரிஃபுனா கலாச்சாரத்தின் முக்கிய பிரதிநிதியாகவும், ஹோண்டுராஸின் முதல் ஆப்பிரிக்க வம்சாவளி பாராளுமன்ற உறுப்பினராகவும் (2006-2010) பணியாற்றியவர்.
அவரது மறைவு கரிஃபுனா சமூகத்திற்கு பெரும் இழப்பாக கருதப்படுகிறது. ஹோண்டுராஸ் அதிபர் சியோமாரா காஸ்ட்ரோ, விபத்து நடந்த உடனேயே அவசரகால குழுவை செயல்படுத்தி, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய உத்தரவிட்டுள்ளார்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.