நாடாளுமன்றில் நேற்று சிறீதரன் கருத்து
(ஆதவன்)
முள்ளிவாய்க்கால் படுகொலையை அரங்கேற்றிய -ராஜபக்ச குடும்பம் எந்தக்காலத்திலும் நிம்மதியாக இருக்கப்போவதில்லை, கர்மவினை அவர்களுக்கு பாடம் கற்பிக்கும். இவ்வாறு தமிழரசுக் கட்சியின் யாழ்., கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் நாடாளுமன்றத்தில் நேற்றுத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
"போர் நடைபெற்றபோது கோத்தாபய ராஜபக்ச பாதுகாப்புச் செயலாளராக இருந்தார். போர் நடைபெறும் பகுதிகளில் 75 ஆயிரம் மக்கள் இருக்கின்றனர். என்று அவர் கூறினார். ஆனால், போர் முடிவடைந்த பின்னர் 4 இலட்சத்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வவுனியா இடைத்தங்கல் முகாம்களுக்குக் கொண்டுவரப்பட்டனர்.
75 ஆயிரம் மக்களுக்கு உணவனுப்பி, நான்கு இலட்சம் மக்களைப் பட்டினி போட்டு, பட்டினியால் மக்கள் கொல்லப்பட்டனர். 4 இலட்சம் மக்களில் எத்தனை பேர் பட்டினியால் கொல்லப்பட்டனர்? வரிசையில் கஞ்சிக்காக நின்ற குழந்தைகள் மீதுகூட குண்டுகள் வீசப்பட்டன. இவ்வளவும் இந்த மண்ணில் நடைபெற்றன.
இதைச் செய்தவர் கோத்தாபய ராஜபக்ச. 69 இலட்சம் சிங்கள வாக்குகளால்தான் வந்தவர், தனக்கு தமிழ் வாக்குகள் தேவையில்லை என மார்தட்டி ஆட்சிக்கு வந்த கோத்தாபய ராஜபக்சவை அதே சிங்கள மக்கள், அதே சிங்கள இளைஞர்கள் 'அரகலய' ஊடாக ஓடஓடக் கலைத்தார்கள். தர்மம் வென்றது.
தர்மம் அவரை நாட்டில் இருந்து அகற்றியது. இருக்க இடமின்றி தெருத்தெருவாகத் திரிந்தார். அந்த இறந்துபோன முள்ளிவாய்க்கால் ஆத்மாக்கள் இன்றும் அவரை நிம்மதியாக உறங்க விடவில்லை. இந்தக் கொலைகள் காரணமாக ராஜபக்ச குடும்பம் எக்காலத்திலும் நிம்மதியாக இருக்கப் போவதில்லை. இதுதான் கர்மவினை. வரலாறு இதை படிப்பிக்கும்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.