நாடாளுமன்றத்தில் கஜேந்திரன் காட்டம்!!
(புதியவன்)
“வடக்கு, கிழக்கில் நீதிமன்றங்கள் இனவாதப் பொலிஸாரின் கட்டளைகளுக்குப் பணிந்து செயற்படுகின்றனவா? பொலிஸார் நீதிமன்றங்களுக்குச் சென்று எதைச் சொன்னாலும் அதை அப்படியே நீதிமன்றங்கள் ஏற்றுக்கொண்டு செயற்பட வேண்டிய அளவுக்கு நீதிமன்றங்களின் சுயாதீனம் பறிக்கப்பட்டுள்ளதா?" என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற நிதிக் கட்டளைகள் தொடர்பான விவாதத்தில் உரையாற்றும் போது கேள்வி எழுப்பினார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்
"எமது தேசம் மீதான ஒடுக்குமுறைகள் எல்லை மீறிச் செல்கின்றன. எமது தேசத்தின் மீது சிறிலங்கா அரசு இனப்படுகொலையை அரங்கேற்றி 15 ஆண்டுகள் கடந்துள்ளன. ஆனால், இன்றுவரை படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை. இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட மற்றும் கருணா, பிள்ளையான், ஈ.பி.டி.பி.யால் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களைத் தேடி அவர்களின் உறவுகள் இன்றும் அலைந்து கொண்டிருக்கின்றனர்.
இவ்வாறாக மே 18 ஆம் திகதியை முன்னிட்டு எங்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலையை நினைவுகூர்ந்து நீதி கோரும் விதமாக வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் இந்த இனப்படுகொலை வாரத்தை நினைவுகூருகின்றனர். 2009 ஆம் ஆண்டில் உணவை ஆயுதமாகப் பயன்படுத்திய கோத்தாபய ராஜபக்ஷவும், மஹிந்த ராஜபக்ஷவும் தமிழ் மக்களைப் பட்டினிச் சாவுக்குள் தள்ளிய போது தமிழ்மக்கள் கஞ்சி குடித்து உயிர்பிழைத்த வரலாறு உள்ளது.
இதனை நினைவுகூரும் விதமாக மக்களுக்கு இந்த வாரம் கஞ்சி கொடுப்பது வழமை. அந்தவகையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை திருகோணமலையில் ஆலயமொன்றில் கஞ்சி கொடுக்கும் நிகழ்வில் பங்குபற்றிய எமது கட்சியின் திருகோணமலை மாவட்ட உதவிச் செயலாளர் ஹரிஹரகுமார் மற்றும் 3 பெண்கள் கைது செய்யப்பட்டு மூதூர் நீதிவான் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் 4 பேரும் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும். என்றார். (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.