(ஆதவன்)
தமிழ்ப் பொதுவேட்பாளராக நான் தேர்தலில் போட்டியிட மாட்டேன். அரச தலைவராக வருவதற்கு அரச தலைவர் வேட்பாளராக, எதிரணி சார்பான பொதுவேட்பாளராக, என்னைக் களமிறங்கச் சொன்னால் அது தொடர்பில் பரிசீலிக்கமுடியும் என அரச தலைவர் சட்டத்தரணியும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
வடமராட்சியில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே சுமந்திரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
திருகோணமலை - மூதூரில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சும் நினைவேந்தலை பொலிஸார் நீதிமன்றக் கட்டளை ஊடாகத் தடுத்துள்ளதாக அறிய முடிகிறது. நினைவேந்தல்கள் உலக நியமங்களிலே மிக முக்கியமானதொன்று. இதைத் தடுப்பவர்கள் மிக மோசமான செயல்களிலே ஈடுபடுகிறார்கள். அரச தலைவருக்கு ஒரு செய்தியைச் சொல்ல இருக்கிறோம். உங்கள் கட்டளையின் பேரிலோ அல்லது உங்கள் அமைச்சர்களின் கட்டளையின் பேரிலோ நினைவேந்தல்களைத் தடுக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படுமாக இருந்தால் வரப்போகும் அரச தலைவர் தேர்தலில் எமது மக்களிடம் வாக்குகளைக் கேட்டு வரவேண்டாம்.
பொது வாக்கெடுப்புக்கான அடையாளமாக தமிழ்ப் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்தப் போகிறோம் என்று கூறுபவர்களுக்கு ஆதரவாகக் கூறும் செய்தியல்ல இது. அது வேறு விடயம். அது சம்பந்தமாக எமது தமிழ் அரசுக் கட்சி வரும் 19ஆம் திகதி கூடி சரியாக ஆராய்ந்து ஒரு தீர்மானத்தை எடுக்கும். அது சம்பந்தமான வேறு விடயங்களை நான் தெரிவிக்க விரும்பவில்லை. ஏற்கனவே எமது கட்சியின் பெரும் தலைவர் இந்த விடயத்தில் அவசரப்பட்டு ஒரு முடிவினை எடுத்துவிட வேண்டாம் என்று அறிவித்திருக்கிறார். நாங்கள் அவருடைய கருத்தையும் ஏனையோருடைய கருத்தையும் சீராக ஆராய்ந்து பொருத்தமான முடிவுக்கு வருவோம் என்று தெரிவித்தார்.
அரச தலைவர் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது தொடர்பில் வடக்கு - கிழக்கில் பொது அமைப்புகள், அரசியல்கட்சிகள் கலந்துரையாடி வருகின்றன. இதற்கான பொதுவேட்பாளராக எம்.ஏ.சுமந்திரனை நிறுத்தலாம் என்று பேச்செழுந்துள்ளது. அது உண்மையா? உங்களிடம் இது பற்றி கேட்கப் பட்டதா? என்ற கேள்விக்குப் பதிலளித்த எம்.ஏ.சுமந்திரன், 'ஆம்' எனத் தெரிவித்ததுடன், உத்தியோகபூர்வமாக அனைவரும் இணைந்து இந்தக் கோரிக்கையை முன்வைக்கவில்லை. ஆனால், இந்தப் பேச்சுகள் எழுந்த வேளையிலே சுரேஷ் பிரேமச்சந்திரன் என்னிடம் ஒருதடவை இது தொடர்பில் கேட்டிருந்தார். அப்பொழுதே நான் என் நிலைப்பாட்டைத் தெரிவித்துள்ளேன். அப்படியான தமிழ்ப் பொதுவேட்பாளராக நான் தேர்தலிலே போட்டியிடமாட்டேன், அரச தலைவராக வருவதற்கு அரச தலைவர் வேட்பாளராக, அரச தலைவர்பொது வேட்பாளராக, அரச தலைவர் எதிரணி வேட்பாளராக என்னைக் களமிறங்கச் சொன்னால் அது வேறு விடயம்.
இந்த நாட்டிலே எந்தச் சமூகத்தவரும் எந்தச் சமயத்தவரும், எந்த மொழியைப் பேசுபவர்களும் அரச தலைவராக வரமுடியும், அதற்குப் போட்டியிட முடியும். ஆகையாலேயே அப்படியான சூழ் நிலையிலே நான் மட்டுமல்ல வேறு எவராவதும் போட்டியிட அழைக்கப்பட்டாலும் அதை ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்பது தான் எனது நிலைப்பாடு. ஆனால், தமிழ் மக்களது அரசியல் அபிலாஷைகளை வெளிப்படுத்துவதற்கு அரச தலைவர் தேர்தலிலே ஒரு பொதுவேட்ப்பாளரை நிறுத்தி அந்த அபிலாசைகளை வெளிப்படுத்த வேண்டும் என்ற கருத்தில் எனக்கு உடன்பாடில்லை - என்றார்.(ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.