இணுவிலில் இயங்கிய உயிர்கொல்லி தொழிற்சாலை
(புதியவன்)
இலங்கையிலேயே இரண்டாவது உயிர்கொல்லி ஐஸ் உற்பத்தி தொழிற்சாலை யாழ்ப்பாணம் இணுவிலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தப் பகுதி சுற்றிவளைக்கப்பட்டு கண்டுபிடிக்கப்பட்டு நீதிமன்றுக்கு அறிக்கையிடப்பட்டு இன்றைய தினம் யாழ். போதனா மருத்துவமனை சட்டமருத்துவ அதிகாரி செ.பிரணவன் மற்றும் யாழ். பல்கலைக்கழக இராசயனவியல் பேராசிரியர் வேலாயுதமூர்த்தி ஆகியோர் பார்வையிட்டு, உயிர்கொல்லி ஐஸ் தொழிற்சாலை என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் உயிர்கொல்லி ஐஸ் போதைப்பொருள் பயன்படுத்தியதாக சந்தேகநபர் ஒருவர் அண்மையில் சிறிலங்கா பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார். அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் யாழ்ப்பாணத்திலேயே உயிர்கொல்லி ஐஸ் உற்பத்தி செய்யப்படுவது தொடர்பான ஆரம்பக்கட்ட தகவல்கள் சிறிலங்கா பொலிஸாருக்கு கிடைத்துள்ளன. அவர்கள் தமது விசாரணைகளை தீவிரப்படுத்தியிருந்தனர். இதற்கு அமைவாக இணுவில் துரை வீதியில் மக்கள் குடியிருப்புக்களுடன் இருந்த ஒரு பழுதடைந்த வீட்டில் உயிர்கொல்லி ஐஸ் தொழிற்சாலை இயங்கியமை கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை சிறிலங்கா பொலிஸார் அதை முற்றுகையிட்டு தமது கட்டுப்பாட்டில் எடுத்துள்ளனர். அந்த வீடு முற்றுகையிடப்படும்போது எவரும் அங்கிருக்கவில்லை. அந்த வீடு யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வன்முறைக்கும்பலின் சூத்திரதாரி என்று அறியப்படும் நபருடையது என சிறிலங்கா பொலிஸார் கூறுகின்றனர்.
வீட்டில் ஆய்வுகூடத்தை ஒத்த அமைப்புக்கள் காணப்பட்டுள்ளன. இதையடுத்து அங்கு உயிர்கொல்லி ஐஸ் போதைப்பொருள்தான் உற்பத்தி செய்யப்பட்டது என்பதை உறுதிப்படுத்துவதற்காக நீதிமன்றத்தின் அனுமதியுடன் இன்றைய தினம் சட்டமருத்துவ அதிகாரி மற்றும் இரசாயனவியல்துறை பேராசிரியர் ஆகியோருடன் சென்று சோதனை முன்னெடுத்துள்ளனர்.
திரவ அல்லது வேறு வடிவில் கொண்டுவரப்படும் உயிர்கொல்லி ஐஸ் உற்பத்திக்கான மூலப்பொருள்கள் இங்கு வந்து வேறு சில இரசாயனங்களின் கலப்பின் ஊடாக உயிர்கொல்லி ஐஸ் போதைப்பொருளாhக மாற்றப்பட்டுள்ளன. இது நீண்டகாலமாக இயங்கி வந்துள்ளது என்பதுடன் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களுக்கும் தெரிந்தே இது செயற்பட்டிருக்கலாம் என சிறிலங்கா பொலிஸார் சந்தேகிக்கின்றனர். ஏனெனில் இரசாயனகலவைகளில் மாற்றங்கள் செய்யப்படும்போது அதன் மணம் பல மீற்றர்களுக்கு பரவும் என்று அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர். மருத்துவமனை ஆய்வுகூடங்களுக்கு பயன்படுத்தப்படும் பல பொருள்கள் அங்கிருந்து மீட்கப்பட்டுள்ளன. மேலும் அங்கிருந்து மீட்கப்பட்ட பொருள்களை சோதனைக்கு உட்படுத்தியபோது அவை உயிர்கொல்லி ஐஸ் போதைப்பொருள் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை பிரதான சந்தேகநபர் இன்னமும் கைது செய்யப்படவில்லை என்றும், மற்றொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் சிறிலங்கா பொலிஸார் தெரிவிக்கின்றனர். (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.