இலங்கையில் இடம்பெற்ற இறுதிப் போரின்போது கொல்லப்பட்டவர்களுக்காகவும் மனித உரிமை மீறல்களைச் சந்தித்தோருக்காகவும் கனடா தொடர்ந்து நீதிகேட்கும். இந்தப் பயணத்தை கனடா ஒருபோதும் நிறுத்தாது என்று வெளிப்படையாகவே தெரிவித்தும்- எச்சரித்தும் இருக்கின்றார் கனேடியப் பிரதமரான ஜஸ்ரின் ட்ரூடோ. போர்க் குற்றங்களுக்கான பொறுப்புக்கூறலை ட்ரூடோவும் அவர் தலைமையிலான கனடாவும் கொழும்பிடம் வலியுறுத்துகின்றமை இதுவொன்றும் முதல்முறையல்ல. இரண்டு வருடங்களுக்கு முன்னர் அதாவது 2022ஆம் ஆண்டில் கனேடிய நாடாளுமன்றத்தில், 'இலங்கையில் இடம்பெற்றது இனப்படுகொலையே. இலங்கை அரசாங்கம் அத்தகைய போர்க்குற்றங்களில் ஈடுபட்டது' என்ற தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. அத்துடன், 2009ஆம் ஆண்டிலும் அதற்கு முன்னரும் இடம்பெற்ற இனப்படுகொலைகள் மற்றும் மனித உரிமைகள் மீறலுக்காக இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ச, கோத்தாபய ராஜபக்ச ஆகியோருக்கும் இராணுவப் பின்புலம் கொண்ட சுனில் ரத்நாயக்க மற்றும் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி ஆகியோருக்கும் பொருளாதாரத் தடைகளை விதித்து உத்தரவிட்டிருந்தது கனேடிய அரசாங்கம். ஆக, தமிழர்களுக்காக ஆத்மார்த்தமாக நீதிதேடும் பயணத்தின், ஒருபகுதி நடவடிக்கைதான் முள்ளிவாய்க்கால் படுகொலை நாளில் ட்ரூடோவிடமிருந்து வெளிப் பட்ட கருத்துகள் என்றும் கொள்ளலாம்.
இறுதிப்போரின்போதும் அதற்கு முன்னதாகவும் இலங்கையில் போர்க்குற்றங்கள் இடம்பெற்றன என்று தமிழர்கள் நீண்டகாலமாகவே தீர்க்கமாக வலியுறுத்தி வருகின்றனர். எனினும் இதற்கான நீதி இன்னமும் வழங்கப்பட்டதாகவில்லை. குறைந்தபட்சம் இந்தப் போர்க்குற்றங்களுக்கான பரிகார நீதியைக் கண்டடைவதற்கான பொறிமுறைகள்கூட உள்நாட்டிலும், சர்வதேசத்திலும் ஏற்படுத்தப்படவில்லை. தமக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு போர்க்குற்றங்களுக்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை காத்திரமான நடவடிக்கையொன்றை எடுத்து, நீதியை வழங்கும் என்று தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்றபோதிலும் அந்தக் காத்திருப்புக்கான பதிலை வழங்குவதற்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை, வரலாறு நெடுகிலும் தவறியே வந்திருக்கின்றது.
இலங்கை அரசாங்கத்துக்கு மாறிமாறி வழங்கப்பட்டுக் கொண்டிருக்கும் கால அவகாசங்கள், போர் தின்றுகொன்ற தமிழினத்தை மேலும் வதைத்தெறிகின்ற நிலையில், கனேடிய அரசாங்கத்தின் இந்த அதிரடி நடவடிக்கைகள், கனேடியத் தலைவர்களின் கருத்துகள், அஞ்சலிப்புகள், ஆற்றுப்படுத்தல்கள் தமிழர்களின் மனக்காயங்களை நிச்சயம் ஆற்றுப்படுத்தும் மருந்திடும். ஆதலால், ஈழத் தமிழர்களின் விடயத்தில் கனேடிய அரசாங்கத்தை எத்தனை பாராட்டினாலும் அத்தனையும் தகும். கனேடிய அரசாங்கத்தின் தீர்மானங்களை அடுத்து, அவற்றை நீர்த்துப்போகச் செய்வதில் ராஜதந்திர ரீதியாக இலங்கை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டிருந்தது. இம்முறை கனடாவில் மேற்கொள்ளப்படும் நினைவேந்தல்களில், 'போர்க்குற்றங்கள்' என்ற சொல்லுக்குப் பதிலாக 'விரும்பத்தகாத செயல்கள்' என்ற சொல்லைப் பயன்படுத் தும்படி தூதரக ரீதியிலான அழுத்தமும் கொடுக்கப்பட்டது. ஆயினும், தன் நிலைப்பாட்டில் கனடா இம்மியும் தளர்வதாக இல்லை.
இறுதிப்போர் முடிவடைந்து, ஒரு தசாப்தத்துக்கு மேலாகின்றது. இதுவரை தமிழினம் எத்தனையோ முறையிடல்களை, கவனவீர்ப்புகளை, நீதிக்கான கோரிக்கைகளை உலக நாடுகளிடமும் ஐக்கிய நாடுகள் சபை போன்ற‘உலக அரசாங் கங்களிடமும்' மாறிமாறி விடுத்துக் கொண்டுதான் இருக்கின்றது. ஆனால், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் மட்டும் ஒன்றல்ல இரண்டல்ல சுமார் 22க்கும் மேற்பட்ட தடவைகள் தமிழினம் ஏமாற்றப்பட்டிருக்கின்றது. தமிழினம் பறிகொடுத்த உயிர்ப்பலிகள் மென்போக்குத் தன்மையுடனேயே அணுகப்பட்டிருக்கின்றன. ஆனால், உண்மையில் ஏற்படவேண்டிய மாற்றத்துக்கும் - மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெடுப்புகளுக்கும் கனடா கடந்த ஐந்து ஆண்டுகளாகக் கட்டியம் செய்து கொண்டிருக்கின்றது. இந்தக் காத்திரமானதும் -முதுகெலும்புத்தனம் மிக்கதுமான நடவடிக்கைகள் பரவலாக்கப்பட்டு அவை செயலுருப் 'பெறுகின்றபோதுதான் இலங்கை போன்ற அரசாங்கங்களுக்கு எதிரான நீதியென்பது, கேந்திர முக்கியத்துவம் - பிராந்திய நலன் என்பவற்றைத் தாண்டி கைக்கெட்டும். சிறுபான்மை மக்களின் இருப்பும் உறுதிப்படுத்தப்படும்...!
#ஆசிரியர்_தலையங்கம் #வாசகர்கடிதம் #உதயன் #eelam #eelamnews #jaffnanews #uthayannews #recentnews #breaking
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.