கடன் வாங்குவது வெற்றியா!!!!!!!!!!!!!!
கடன் வாங்குவது வெற்றியா!!!!!!!!!!!!!!

'கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள வெற்றி நாட்டுக்குக் கிடைத்த தனித்துவமான வெற்றி" என்று நாடாளுமன்றத்தில் உரையாற்றியுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பெருமிதப்பட்டிருக்கின்றார். கடந்த இரண்டு வருடங்களாகத் தாம் அரசியலில் ஈடுபடவில்லை என்றும், நாட்டுக்காகவே தீர்மானங்கள் எடுக்கப்பட்டதேயன்றி, அதிகாரத்துக்காசுவோ அல்லது பிரபல்யத்துக்காகவோ தீர்மானங்கள் எடுக்கப்படவில்லை என்றும் கூறியிருக்கின்றார்.

நாட் டில் பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்ட அரசியல் நெருக்கடியைப் பயன்படுத்தி ஆட்சிக்கு வந்த ரணில் விக்கிரமசிங்க, இலங்கையின் ஆபத்தவராகத் தன்னைக் காட்டிக்கொண்டாலும் அவரின் செயற்பாடுகள் அவ்வாறிருக்கவில்லை. பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியிருந்த நாட்டை மீட்பதைக் காட்டிலும், அரசியலில் படுபாதாளத்தில் வீழ்ந்திருந்த தன்னுடையதும் தன் கட்சியினதும் அரசியல் ஆதரவுத் தளத்தை மீட்டெடுப்பதிலேயே அவர் அதிக ஆர்வம் காட்டியிருந்தார். போர் வெற்றியின் மூலம் ஏற்பட்ட 'மவுசை பயன்படுத்தி அதிகாரத்தை இறுகப் பற்றியிருந்த அரசியலில் கோலோச்சிக்கொண்டிருந்த ராஜபக்சக்களை ஆட்டம் காண வைக்கும் நகர்வில் அவர் சிறிது வெற்றியும் பெற்றிருக்கின்றார்.

அதிகாரத்துக்கு வந்தது முதல் ரணில் விக்கிரமசிங்க தனது உரைகளில் 'நாட்டுக்காக' என்ற சொல்லாட லுடன் மக்கள் ஆதரவைத் தன்பக்கம் திருப்ப முயற் சித்தாலும் நாட்டின் அனைத்துச் சிக்கலுக்கும் மூல காரணமான இனப்பிரச்சினைத் தீர்வு முதல் அனைத்து விடயங்களிலும் அவர் ஆக்கபூர்வமாக எதையும் மேற் கொண்டதாக இல்லை. வரிசையுகத்துக்கு முடிவுகட்டி நாட்டில் இயல்புநிலைமை ஏற்படுத்தப்பட்டுள்ளது. என்று ரணில் விக்கிரமசிங்க பீற்றிக்கொண்டாலும் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள இயல்பு நிலைமை தற்காலிகம் என்பதே நிபுணத்துவக் கணிப்பாகவிருக்கின்றது.

சர்வதேச நாணய நிதியத்திடமும், சர்வதேச நாடுகளிடம் இருந்தும் பெற்றுக்கொண்ட கடன்களின் மூலமே இந்தத் தற்காலிக இயல்பு நிலைமை தோற்று விக்கப்பட்டிருக்கின்றது. கடந்தகால அரசாங்கங்கள் செய்த தவறுகளே நாட்டின் உற்பத்தி வருமானத்தை மேம்படுத்தாமல் கடன்மேல் கடன்வாங்கி அரசைக் கொண்டுநடத்தியதே நாடு இப்போது எதிர்கொண்டிருக்கும் பொருளாதார நெருக்கடிக்குப் பிரதான காரணம் என்று சுட்டிக்காட்டப்படும் நிலையில், தற்போது ரணில் விக்கிரமசிங்கவும் அதே தவறையே செய்கின்றார். கடன்களின் மூலம் நாட்டின் இயல்பு நிலைமை தோற்றுவிக்கப்பட்டாலும் நாட்டின் பொருளாதார நெருக்கடி இன்னமும் அதேகனதியுடன் புகைந்து கொண்டே இருக்கின்றது.

நாட்டின் அனைத்துச் சிக்கல்களும் இன்னமும் அப்படியேதான் இருக்கின்றன. சொல்லப்போனால் இனிவரும் காலங்களில் அவை அதிகம் பாதிப்புகளைச் சாதாரண மக்கள் தலையில் சுமத்தத்தான் போகின்றன. நாட்டுக்காக என்று ஆட்சிக் கதிரையைக் கைப்பற்றிக்கொண்ட ரணில் விக்கிரமசிங்க, உண்மையிலேயே நாட்டுக்காகச் சிந்தித்திருந்தால், நாட்டில் புரையோடிப்போய் அனைத்துச் சிக்கலுக்கும் ஆணிவேராக இருக்கும் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும்.

நாட்டின் அனைத்து இன மக்களையும் ஒன்றிணைத்து நாட்டின் தேசிய உற்பத்தி வருமானத்தை அதிகரித்துக்கொள்வதற்குரிய திட்டங்களைத் தீட்டியிருக்கவேண்டும். அவற்றையெல்லாம் தட்டிக் கழித்துவிட்டு -நாட்டின் பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்துவிட்டன என்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்தி ஆதாயம் தேட முற்படக்கூடாது. சாதாரண மக்கள் தலையில் அதன் பாரத்தைச் சுமத்துவது இறுதியில் ஒட்டுமொத்த நாட்டையும் மீளமுடியா படுகுழியில் தள்ளும் என்பதே உண்மை.

 

#ஆசிரியர்_தலையங்கம் #வாசகர்கடிதம் #உதயன் #eelam #eelamnews #jaffnanews #uthayannews #recentnews #breaking

541 0

Leave a comment

தொடர்புடைய செய்திகள்

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.