கண்காணிப்புகள் கட்டாயம்!!!!!!
கண்காணிப்புகள் கட்டாயம்!!!!!!

யாழ்ப்பாணத்தில் இயங்கிவந்த இரு சிறுவர் இல்லங்கள் ஆளுநரின் உத்தரவின்பேரில் இழுத்து மூடப்பட்டிருக்கின்றன. அவற்றில் ஒன்று, பெண்பிள்ளைகள் குளிக்கும் இடத்தில் தவறான வகையில் கண்காணிப்புக் கமரா பொருத்தப்பட்டதால் சமூகச் சீரழிவுகள் ஏற்பட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டு மூடப்பட்டிருக்கிறது. இன்னொன்று, உரிய அனுமதிகள், வசதிகள் இல்லாமல் இயங்கியதால் மூடப்பட்டுள்ளது. இவ்வாறு சிறுவர் இல்லங்கள் குறித்தும், அங்கு நிகழும் விரும்பத்தகாத சம்பவங்கள் குறித்தும் செய்திகள் வெளிவருவதும், அவற்றின் மீது நடவடிக்கைகள் பாய்வதும் இதுவொன்றும் முதன்முறையல்ல. கடந்த வருடமும் நாலைந்து சிறுவர் இல்லங்கள் குறித்த திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி இருந்தன. அவற்றில் சில இல்லங்கள் மூடப்பட்டும் இருக்கின்றன. இன்னும் சில சிறுவர் இல்லங்கள் தொடர்பில் வழக்குகளும் நடந்து வருகின்றன.

இவ்வாறு தொடர்ச்சியாக சிறுவர் இல்லங்கள் மீதான குற்றச்சாட்டுகள் எழுவதற்குப் பல காரணங்கள் உண்டு. சிறுவர் இல்லங்களை நடத்துவோர், இப்போதெல்லாம் அதனை ஒரு தொண்டாகப் பார்ப்பதில்லை. புலம்பெயர் நிதியைப் பெறக்கூடிய வருமானமீட்டலுக்கான பொறி முறையாகவும், புகழீட்டுவதற்கான குறுக்கு வழியாகவும் சிலர் இந்தச் சிறுவர் இல்லங்களைக் கைக்கொள்ளத் தொடங்கி விட்டார்கள். அதனால் அந்த இல்லங்களில் தங்கியுள்ள பிள்ளைகளின் நலனை விடவும், அந்த இல் லத்தை வைத்து எப்படியெல்லாம் கழிவிரக்கத்தை ஏற்படுத்தி, காசு சம்பாதிக்கலாம், புகழை வாங்கலாம் என்பதில்தான் சிறுவர் இல்ல நிர்வாகிகள் சிலரின் கவனம் குவிந்துள்ளது. புதிய புதிய பெயர்களில் மூலை முடுக்கெல்லாம், அனுமதி ஏதும் பெறாமல் சிறுவர் இல்லங்களை ஆரம்பிப்பதென்பதும் இவ்வாறு பண மீட்டலுக்கும், புகழ் பெறவும் தானோ என்ற சந்தேகமும் எழவே செய்கிறது. உண்மையாகவே சிறார்களின் நலன் பேணுவதற்காக, தன்னார்வமாக சிறுவர்களைப் பரா மரிப்போரும் இருக்கவே செய்கின்றனர். ஆனால் அவர் கள் ஒருசிலர் செய்கின்ற கீழ்த்தரமான காரியங்களால் நல்லெண்ணத்தோடு செயற்படும் பலரின் அர்ப்பணிப்பான சேவைகளும் பெறுமதியிழக்கவேண்டிய சூழல் எழுந்துள்ளது.

இந்த நிலைக்கான இன்னொரு காரணி, உரிய திணைக்களங்களின் சீரான மேற்பார்வையின்மையே. சிறுவர் இல்லங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனவா? உரிய அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளனவா? அவை இயங்குவதற்காக முன்வைக்கப்பட்ட நிபந்தனைகள் சரிவரப் பின்பற்றப்படுகின்றனவா? சிறார்களுக்கான உணவு, தங்குமிடம் உள்ளிட்ட சகல வசதிகளும் சரிவர எல்லோருக்கும் கிடைக்கின்றனவா? துஷ்பிரயோகங்கள் ஏதும் நிகழ்வதற்கான சாத்தியங்கள் உண்டா? என்பன குறித்தெல்லாம், சிறுவர் இல்லங்களை மேற்பார்வை செய்யும் அதிகாரம் கொண்டவர்கள் குறிப்பாக சிறுவர் நன்னடத்தைத் திணைக்கள அதிகாரிகள் கரிசனை காட்ட வேண்டும். ஆனால், அவர்கள் தங்கள் கடமை களை உரியகாலத்தில் செய்யத்தவறுவதாலும், பார பட்சம் பார்ப்பதாலும் சிறுவர் இல்லங்களை நடத்தும் ஒருசிலர் தம்மிஷ்டப்படி ஆடுகின்றனர். சிறிது, பெரிது என்ற பேதம் பாராமல் சகலரையும் சமமாகக் கருதி, எல்லாச் சிறுவர் இல்லங்களையும் தமது தீவிர கண் காணிப்பு வளையத்துக்குள் உரிய அதிகாரிகள் கொண்டுவந்தாலேயே, அந்த இல்லங்களில் நடைபெறும் விரும்பத்தகாத சம்பவங்களை வெகுவாகக் குறைக் கக்கூடிய சாத்தியங்கள் உண்டு. ஆனால், ஒரு சிறுவர் இல்லம் பற்றிய முறைப்பாடுகள் ஊடகங்களில் வெளி வந்தவுடன், பரபரப்பாக இயங்கும் சிறுவர் நன் நடத்தைத் திணைக்களத்தினர் பின்னர் படிப்படியாக உறங்கு நிலைக்குச் சென்றுவிடுகின்றனர். பின்னர் மறுபடி ஒரு குற்றச்சாட்டு பூதாகரமாகும்போதே அவர்கள் விழித்தெழுகின்றனர். இந்த நிலை மாறவேண்டும். சிறுவர் இல்லங்கள் தொடர்பில் தொடர்ச்சியான, இறுக்கமான கண்காணிப்புகள் அவ சியம். இல்லாவிட்டால், சிறுவர் இல்லங்கள் என்றாலே பேயுலாவும் வீடுபோல நோக்கும் மனோநிலை மக்களிடத்தே ஏற்பட்டுவிடலாம்.

 

#ஆசிரியர்_தலையங்கம் #வாசகர்கடிதம் #உதயன் #eelam #eelamnews #jaffnanews #uthayannews #recentnews #breaking

576 0

Leave a comment

தொடர்புடைய செய்திகள்

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.