"சொல்லைவிட செயலே சிறந்தது"
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம், நீண்ட பிரயத்தனங்களின் பின்னர் தற்போது மீண்டும் இயங்க ஆரம்பித்திருக்கின்றது. இப்போது மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான- தமிழகத்திலிருந்து பலாலி வரையான விமான சேவைகளே முன்னெடுக்கப்படு
கின்றன.
’யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம்’ 2019 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 17ஆம் திகதி அப்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரோல் திறக்கப்பட்டது. தமிழ் மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இந்த விமான நிலையம் கொரோனா பெருந்தொற்றுக் காரணமாக 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதத்துடன் மூடப்பட்டது.இந்திய நிதியுதவியுடன் சீரமைக்கப்பட்டு யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் இயங்க ஆரம்பித்த போதும், அதை வினைத்திறனுடன் இயங்கவைக்கும் ஆர்வம் இலங்கை அரசாங்கத்திடம் இருக்கவில்லை. தமிழ்நாட்டுக்கான விமான சேவைகளே நடத்தப்பட்டிருந்த நிலையில், மட்டுப்படுத்தப்பட்ட சிறிய பயணிகள் விமானங்களே சேவையில் ஈடுபடுத்தப்பட்டன. வடக்கில் அமைக்கப்படும் சர்வதேச விமான நிலையத்தால் வடக்கு மாகாணத்துக்கும் - தமிழ் மக்களுக்கும் பொருளாதார ரீதியான
அனுகூலங்கள் கிடைக்கும் என்று எதிர்பார்த்த தமிழ் மக்களுக்கு ஏமாற்றமே கிட்டியது.
நீண்ட இடைவெளியின் பின்னர் இப்போது மீண்டும் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் இயங்க ஆரம்பித்திருக்கும் நிலையில், வடக்கு மாகாண சிறு உற்பத்தியாளர்களின் உற்பத்திகளை ஊக்குவிக்க யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தில் நிரந்தர விற்பனைத் தொகுதி அமைக்கப்படும் என்று வடக்கு மாகாண ஆளுநர் அறிவித்திருக்கின்றமை வரவேற்புக்குரியது. வடக்கு மாகாணத்தின் உள்ளூர் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கவும், உள்ளூர் உற்பத்திகளுக்கான சந்தை வாய்ப்புக்களை ஏற்படுத்தவும் இது ஒரு பெரும் வாய்ப்பாக இருக்கும். உள்ளூர் உற்பத்திகளை சர்வதேச மட்டத்துக்கு எடுத்துச் செல்லவும் இது வழிவகுக்கும். பொருளாதார எழுச்சியை எதிர்பார்த்திருக்கும் மக்களுக்கு பேருதவியாகவும் இருக்கும். வாய்வார்த்தையாக இல்லாது அதைச் செயலிலும் வடக்கு ஆளுநர் காட்டவேண்டும்.
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இப்போது தமிழ்நாட்டுக்கான விமான சேவைகளே முன்னெடுக்கப்படுகின்றன. மட்டுப்படுத்தப்பட்ட அளவில் நடக்கும் விமான சேவைகளில் குறைந்தளவானோரே பயணிக்கின்றனர். விமான நிலையத்தின் ஊடாக நடக்கும் விமான சேவைகளை அதிகரித்தாலேயே வடக்கு ஆளுநரின் யோசனை முழு வெற்றியடையும். இல்லாவிட்டால் ‘ஆளில்லாக் கடையில் தேநீர் ஆற்றும்’ செயலாகவே இருக்கும் என்பதையும் ஆளுநர் மனதில் கொள்ளவேண்டும்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.