ஜேர்மனியின் ஹம்பர்க் நகரில் உள்ள தேவாலயத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் பலர் காயமடைந்திருக்கலாமெனவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஹம்பர்க் பொலிஸாரின் கூற்றுப்படி, க்ரோஸ் போர்ஸ்டெல் மாவட்டத்தில் உள்ள டீல்போஜ் தெருவில் உள்ள தேவாலயத்தில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
குறித்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தினை மேற்கொண்டவர்கள் யார் என்ற விபரம் இதுவரை வெளியாகாத நிலையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் காரணமாக அருகில் வசிப்பவர்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும், குற்றவாளியைக் கண்டுபிடிக்க அதிகாரிகள் தீவிரமாக பணியாற்றி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
எச்சரிக்கை செயலியைப் பயன்படுத்தி, "தீவிர ஆபத்து" குறித்து அப்பகுதி பொது மக்களை பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
இந்த சம்பவத்தினை தொடர்ந்து குறித்த பகுதி முழுமையாக பொலிஸாரினால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளதாகவும், சந்தேகநபர்கள் தப்பியோடியதற்கான எந்த அறிகுறியும் இல்லை என்றும் பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
இது தொடர்பில் ட்விட்டரில் பொலிஸார் வெளியிட்டுள்ள அறிக்கையில், "குற்றத்திற்கான நோக்கம் குறித்து நம்பகமான தகவல்கள் எதுவும் இல்லை" என்றும், ஊகங்களைப் பகிரவோ அல்லது வதந்திகளைப் பரப்பவோ வேண்டாம் என்று பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.