புதியவன்
கடந்த காலங்களில் தமிழ் மக்கள், குறிப்பாக வடக்கு - கிழக்கு ஈழத்தமிழ் உடன்பிறப்புக்கள், தென்னிலங்கை தமிழ் வேட்பாளர்களுக்கு தாராளமாக வாக்களித்தார்கள்.
ஒருமுறை தேர்தலை புறக்கணித்தார்கள். இந்த இரண்டு செயன்முறைகளும் எதிர்பார்க்கப்பட்ட பயன்பாட்டை தராத காரணத்தால் தான், இன்று பொது தமிழ் வேட்பாளர் என்ற யோசனை முன்வைக்கப்பட்டு கலந்துரையாடப்படுகிறது.
இதன் சாத்தியப்பாடு, பயன்பாடு தொடர்பில் கவனமாக ஆராய வேண்டும் என தமிழ் முற்போக்குக் கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகச் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:
அரச தலைவர் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் போட்டியிடுவார் எனில் அவருக்கு தமிழ் வாக்காளர்கள், குறிப்பாக வடக்கு - கிழக்கு தமிழ் வாக்காளர்கள் ஒட்டுமொத்தமாக வாக்களிப்பார்கள் என்பதை உறுதி செய்ய வேண்டும்.
அடுத்தது, இதன் மூலமாக முழு உலகிற்கும் இலங்கைத் தமிழர்கள் சார்பில் என்ன சொல்லப்பட உள்ளது என்பது தீர்மானிக்கப்பட வேண்டும்.
பொது தமிழ் அரசியல் அபிலாசைகள் என்ன? குறிப்பாக, அது 13 ஆம் திருத்தத்தின் முழுமையான அமுலாக்கமா? பதின்மூன்று பிளசா? சமஷ்டியா? வடக்கு - கிழக்கு இணைப்பா? இவை குறித்து முதலில் பொது முடிவுக்கு தமிழ் கட்சிகள் வர வேண்டும்.
தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் சில கட்சிகள், இன்று அரச தலைவர் தேர்தலை புறக்கணிக்க வேண்டும் எனக் கோருகின்றன.
அவற்றின் சாத்தியப்பாடு, பயன்பாடு தொடர்பில் பல்வேறு கருத்தோட்டங்கள் இருக்கின்றன. ஆனால், இத்தகைய கருத்துக்களை முன்வைக்க அந்த கட்சிகளுக்கு உரிமை இருக்கின்றது.
ஆனால், புறக்கணிப்பு வேண்டாம். பொது தமிழ் வேட்பாளர் வேண்டும் என்று சொல்பவர்கள், அதன்மூலம் உலகத்துக்கு என்ன சொல்ல விரும்புகிறார்கள் என்பதைத் தீர்மானிக்க வேண்டும். குறைந்த பட்ச அல்லது அதிக பட்ச கோரிக்கைகள், நிலைப்பாடுகள், அபிலாசைகள் என்ன? என்பவை பற்றி உரையாட வேண்டும்.
அரச தலைவர் தேர்தல் இன்னும் அறிவிக்கப்படவில்லை. அதற்கிடையில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு நாடாளுமன்றத் தேர்தலும் நடைபெறலாம்.
மறுபுறம், தேர்தல்கள் ஆணையாளர் என்ன சொன்னாலும் கூட, அரச தலைவர் தேர்தலும், நாடாளுமன்றத் தேர்தலும் ஒருசேர நடந்தாலும் ஆச்சரியப்பட முடியாது. ஆகவே, இவை அனைத்தையும் கணக்கிலெடுக்க வேண்டும்.
இதற்கிடையில் எனது பெயரும் பொது தமிழ் வேட்பாளர் பரிசீலனையில் முன்மொழியப்பட்டு உள்ளது.
பொது அரசியல் பரப்பில் நாடறிந்த தமிழ் கட்சித் தலைவராக நான் இருக்கின்ற காரணத்தால் இப்படியான ஒரு யோசனை சொல்லப்படுகிறது.
இதை சொல்ல எவருக்கும் உரிமை உண்டு. இதுபற்றி நானும், எனது கட்சியும் தான் தீர்மானிக்க வேண்டும்.
ஆகவே, இதுபற்றி பெரிதும் அலட்டிக்கொள்ளத் தேவை இல்லை. இங்கே பொது தமிழ் வேட்பாளரை அடையாளம் காணமுன், பொது தமிழ் அரசியல் அபிலாசைகள் என்ன எனத் தீர்மானிக்க வேண்டும் என்பது தான் பிரதானமான தேவைப்பாடாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.(க)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.