முருகன் தமிழ்க்கடவுள் என்று நாம் சொன்னாலும், கதிர்காமம் எமது ஆதி முருகன் ஆலயம் என நாம் கொண்டாடினாலும், அது தமிழ்க் கலாசாரம், சைவ சமய வழிபாட்டு முறைகள், பாரம்பரியங்களில் இருந்து விலகிச் சென்று ஆண்டுகள் பலவாகிவிட்டது.
கொடியேற்றம் பள்ளிவாசலில் நடைபெறுகின்றது, தொன்மையான ஆலயமும் பூசைகளும் நிலமேகளின் பிடியில், சுவாமி ஊர்வல வழிபாடுகள் பெரேரா ஆகிவிட்டது. ஆலய வழிபாடு என்பது கடந்து ஆயிரம் ஆயிரம் மக்கள் கூடுமிடமாக மாறிவிட்டது.
எது மாறினாலும், மாற்றப்பட்டாலும் ஆடிவேல்விழா, கதிர்காமம்கொடி, கதிர்காமத்தீர்த்தம் என்பன தமிழ் பஞ்சாங்கத்தில் மற்றும் நாட்காட்டிகளில் காட்டப்படும் வகையில் ஆடிவேல் விழாவாக சொல்லப்படும் நாளில் நடைபெறுகின்றது. இது மட்டுமே கதிர்காம முருகனுக்கும் சைவத் தமிழருக்கும் இடையில் உள்ள ஒரே தொடர்பாகும்.
ஆனால் அதற்கும் சாவுமணி அடிக்கப்பட்டு, தமிழருக்கும் கதிர்காமத்திற்கும் இருக்கும் தொடர்பு துண்டிக்கப்படும் நிகழ்வு 2023 இல் அரங்கேற்றப்பட்டுள்ளது.
இவ்வாண்டு 18.07.2023 (ஆடி 02) இல் பஞ்சாங்கத்தில் சொல்லப்பட்ட நாளிலேயே கொடியேற்றத்திற்குரிய நாள் அமைகின்றது.. ஆனால் இந்த நாள் ஒரு மாதம் முன்னகர்த்தப்பட்டு எதிர்வரும் 19.06.2023 ( ஆனி 04) இல் கதிர்காமக்கொடியேற்றம் என கதிர்காம நிர்வாகத்தினால் அறிவிக்கப்பட்டு அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்தாகிவிட்டது.
எசலப் பெரேரா முடிவடையும் நாளில் கதிர்காமத் திருவிழா ஆரம்பமானால் நாட்டுக்கு நல்லது நடக்கும் எனும் காரணத்தினால் இது மாற்றப்பட்டதாகச் சொல்லப்படுகின்றது.
இந்தமாற்றத்திற்கு எந்தவித எதிர்ப்பும் மறுப்பும் சைவத்தமிழர் தரப்பில் இருந்து எழாதநிலையில் திருவிழாவிற்கு கன்னிக்கால் நாட்டும் நிகழ்வு 05.05.2023 அன்று நடைபெற்று முடிவடைந்துவிட்டது.
கதிர்காமம் ஏனையோர்க்கு ஒரு களியாட்ட இடமாக, வருமானம் தேடும் இடமாக இருந்தாலும்' சைவத்தமிழருக்கு கதிர்காமத்திற்கும் இடையிலான தொடர்பு மரபணுவில் ஊறிய ஒன்று. இன்றும் பலர் கதிர்காமக்கொடிக்கு முன் தீர்த்தத்திற்குப்பின் என அவர்களது சுபகாரியங்களை வரையறுத்து கொண்டாடுவது தொடர்கின்றது.
கதிர்காமத்திற்கும் சைவத்தமிழருக்கும் இடையிலான உரிமை பறிக்கப்பட்டிருந்தாலும் அவர்களது வழிபாட்டுமுறைகள் மாறிவிடவில்லை. செல்வச்சன்நிதியில் இருந்து வேல்நடை, நாடுமுழுவதும் இருந்து முருகனடியவர்களின் பாதடை வழிபாடு, உகந்தை தொடக்கம் கதிர்காமம்வரையான காட்டுப்பயணப் என மிகக் கடுமையான பத்தியுடன் கூடிய வழிபாடுகளை செய்துகின்றனர். ஆனால் பிற சமயத்தவருக்கு அது களியாட்டமாகவே இருக்கின்றது.
இவ்வாறு இருக்கையில் சைவத்தமிழரின் நம்பிக்கையினை உடைத்து பிறிதொருநாளில் கதிர்காமக்கந்தன் கொடியை அறிவித்து திருவிழாவை நிகழ்த்துவது மிக மோசமான விடயமாகும். கடவுள் நம்பிக்கை மற்றும் வழிபாட்டுமுறைகளுக்கு விரோதமானதும் ஆகும்.
சமகாலத்தில் வடக்கு கிழக்கில் அசுரவேகத்தில் நிகழும் பௌத்த ஆக்கிரமிப்பின் ஒரு அங்கமாகவே கதிர்காம கொடியேற்ற நாள் மாற்றப்பட்டதும் இருக்கின்றது. ஈழத்தில் தொன்மையானவை தமிழருக்குச் சொந்தமானதாக இருக்கக்கூடாது என்பதில் குறியாக இருக்கின்றனர்.
இந்த சமய வழிபாட்டு வழமை மாற்றலை சைவ அமைப்புகள், கலாசாரத்திணைக்களம், முருகனடியவர்கள் அனைவரும் இணைந்து தமது எதிர்ப்பைப் பதிவு செய்யவேண்டும்.
இவ்வாண்டு இது ஆரம்பிக்கப்பட்டு விட்டது. ஆனால் எதிர்காலத்தில் வழமைபோன்று பஞ்சாங்கத்தில் உள்ளவாறு நடத்த வேண்டும் எனும் கோரிக்கையினை அனைவரும் வலியுறுத்த வேண்டும்.
முன்னர் ஒரு தடவை மாற்ற முனைந்த நிலையில் மக்களின் எதிர்ப்பால் அம்முயற்சி கைவிடப்பட்டது என்பதும் வரலாறு.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.