புதியவன்
தமிழ் - சிங்கள புத்தாண்டை முன்னிட்டு அரச தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய நாடளாவிய ரீதியிலிருக்கும் 336 சிறுவர் மேம்பாட்டு நிலையங்களில் பராமரிக்கப்படும் சிறுவர்களுக்கு இனிப்புப் பண்டங்கள் மற்றும் பரிசுப் பொதிகள் இன்று பகிர்ந்தளிக்கப்பட்டன.
கொழும்பு, கம்பஹா உள்ளிட்ட பகுதிகளிலிருக்கும் சிறுவர் இல்லங்களில் புத்தாண்டு பரிசுப் பொதிகள் வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், இம்முறை அந்தத் திட்டத்தை நாடளாவிய ரீதியிலுள்ள சிறுவர் இல்லங்களில் பராமரிக்கப்படும் அனைத்துப் பிள்ளைகளுக்கும் பரிசுகளும் இனிப்புப் பண்டங்களும் வழங்கப்பட்டு வருகின்றன.
வீடுகள் அல்லது பெற்றோரின் அரவணைப்பு கிடைக்காவிட்டாலும் சகல பிள்ளைகளுக்கும் புத்தாண்டு மகிழ்ச்சி கிட்ட வேண்டும் என்ற நோக்கில், 'சிறுவர் இல்லக் குழந்தைகளுக்கும் புத்தாண்டு' என்ற தொனிப்பொருளின் கீழ் அரச தலைவர் அலுவலகம், 'சிலோன் பிஸ்கட் கம்பனி' மற்றும் தனியார் நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
நாடளாவிய ரீதியிலுள்ள சிறுவர் இல்லங்களில் பராமரிக்கப்படும் 10 ஆயிரத்துக்கும் அதிகமான பிள்ளைகளுக்கு அரச தலைவரின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியுடன் இனிப்புப் பண்டங்களும் பரிசுப் பொதிகளும் வழங்கப்பட்டன.
அரச தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய பாதுகாப்புப் பதவி நிலைப் பிரதானி ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் வழிகாட்டலின் கீழ் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகேவின் மேற்பார்வையில் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்படி மத்திய மாகாணத்தில் 40 நிலையங்கள், கிழக்கு மாகாணத்தில் 57 நிலையங்கள், வடமத்திய மாகாணத்தில் 16 நிலையங்கள், வடமாகாணத்தில் 23 நிலையங்கள், சப்ரகமுவ மாகாணத்தில் 19 நிலையங்கள், தென் மாகாணத்தில் 25 நிலையங்கள், ஊவா மாகாணத்தில் 14 நிலையங்கள், மேல் மாகாணத்தில் 106 நிலையங்கள் உள்ளடங்களாக 336 சிறுவர் மேம்பாட்டு நிலையங்களில் பராமரிக்கப்படும் பிள்ளைகளுக்கு பரிசுப் பொதிகள் வழங்கப்பட்டன.(க)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.