தமிழ் மக்களின் செல்வாக்கை – இழக்கவில்லை கூட்டமைப்பு!!
‘தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பு தமிழ் மக்கள் மத்தியில் செல்வாக்கை இழக்கவில்லை. நூறு வீதம் சரியான முடிவுகளை எடுத்து நேரான பாதையில் நாம் பயணிக்கின்றோம். இது எமது மக்களுக்கு நன்றாகத் தெரியும்’ இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் -– கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப் பினர் ஈ.சரவணபவன் தெரிவித்தார்.
‘அரசியல் தெரியாத விக்னேஸ்வரனைக் கொண்டு வந்து வடக்கு மாகாண முதலமைச்சர் ஆக்கியமை முதலாவது பிழை’ எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஆஸ்திரேலியாவுக்கு அண்மையில் பயணம் செய்திருந்த அவர்,அந்தநாட்டு வானொலி ஒன்றுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது:
‘நாம் 100 வீதம் எங்கள் முடிவுகளை சரியாகச் செய்துள்ளோம். ஆனால், அரசு வழங்க வேண்டியவற்றை வழங்காமல் காலத்தை இழுத்தடிக்கின்றது. இதுதான் உண்மை. எம்மை விமர்சிக்கும் மாற்றுக் கட்சிகள் திருப்திகரமான – ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வுத் திட்டத்தை முன்வைத்திருக்கின்றார்களா?
2010ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கில் மாற்றுக் கட்சிகளை எமது மக்கள் நிராகரித்தார்கள். 2015ஆம் ஆண்டு தேர்தலிலும் மாற்றுக் கட்சிகளை அவர்கள் நிராகரித்தார்கள்.
வெளிநாட்டில் இருக்கும் பல புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மாற்றுக் கட்சிகளுக்குத்தான் ஆதரவு வழங்கின. ஆனால், களத்தில் நின்ற எமது மக்கள், மாற்றுக் கட்சிகளைத் தோற்கடித்தனர். இது எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் தொடரும்.
விக்னேஸ்வரனுக்கு அரசியல் தெரியாது. அப்படிப்பட்ட ஒருவரைக் கொண்டு வந்து வடக்கு மாகாண முதலமைச்சர் ஆக்கியமை முதலாவது பிழை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைதான் விக்னேஸ்வரனை முதலமைச்சர் ஆக்கியது. கூட்டமைப்பில் இருந்தவர்கள் பலரும் அதனை அன்றே எதிர்த்தார்கள்.
விக்னேஸ்வரனை வடக்கு மாகாண முதலமைச்சராக களமிறக்க கூட்டமைப்பின் தலைமைப்பீடம் முடிவெடுத்தபோது எனது பத்திரிகைகளான ‘உதயன்’ – ‘சுடர் ஒளி’ப் பத்திரிகைகள் அவரைப் பற்றி எழுதின.
விக்னேஸ்வரன் முதலமைச்சர் பதவிக்குப் பொருத்தம் இல்லை எனவும், மாவை சேனாதிராஜாதான் அந்தப் பதவிக்கு நூறு வீதம் பொருத்தம் எனவும் செய்திகளையும் ஆசிரியர் தலைப்புகளையும் எனது பத்திரிகைகள் அன்று எழுதின.
விக்னேஸ்வரன் முதலமைச்சர் பதவியில் இருந்தபோது எவரினதும் சொல்லையும் கேட்காமல் தான்தோன்றித்தனமாகச் செயற்பட்டார்’ – என்றார்.