அரச தலைவராக வருபவருக்கு மனநோய் சோதனை வேண்டும்
சரத் பொன்சேகா வலியுறுத்து
நான் அரச தலைவராகியிருந்தால் அரச பணத்தில் வெளிநாடுகளுக்குச் சுற்றுலா செல்லவோ, காலையில் ஒன்றையும் மாலையில் ஒன்றையும் கதைக்கவேமாட்டேன். ‘‘கூலிங் கிளாஸ்” அணிந்து கொண்டு நீர்த் தேக்கத்தி லிருந்து ஒளிப்படம் எடுத்திருக்கமாட்டேன். யாரோ ஒரு மகள் தந்தைக்கு எழுதிய புத்தகத்தை நான் சொந்தம் கொண்டாடியிருக்க மாட்டேன். அமெரிக்காவில் அரச தலைவருக்கும் மனநோய் பரிசோதனை செய்யப்படும். அதேபோல் இலங்கையிலும் கொண்டுவர வேண்டும். இவ்வாறு பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்றுப் புதன்கிழமை இடம்பெற்ற விவாதத்தில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் என்னைப்பற்றி விமர்சனங்களை முன்வைத்துள்ளார். நான் கடந்த 2010ஆம் ஆண்டு அரச தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றிருந்தால் கட்சித்தலைவர்கள் எவரையும் வரவழைத்து பேசக்கூட இடமளித்திருக்க மாட்டேன் என்று கூறியுள்ளார். ஆனால் கடந்த 2010 ஆம் ஆண்டு தேர்தலில் உண்மையில் யார் வெற்றி பெற்றது என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன. அப்போதைய அரச தலைவர் மகிந்த தனது அடியாள்களை கொண்டு தேர்தலை தன் பக்கம் திருப்பியமையான ஆதாரங்கள் உள்ளன.
2010 ஆம் ஆண்டு தேர்தலில் நான் வெற்றிபெற்றது உறுதியாக்கப்பட்டிருந்தால் நான் இப்போது அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன செயற்படுவது போல கீழ்த்தரமாகச் செயற்பட்டிருக்க மாட்டேன். அரசமைப்பை மீறி செயற்பட்டிருக்க மாட்டேன். ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவில் வெற்றிபெற்று எதிரணியில் போய் அமர்ந்துகொண்டு என்னை அதிகாரத்துக்கு கொண்டுவந்த நபரது காலைவாரும் செயலைச் செய்திருக்க மாட்டேன். ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவில் ஆட்சியை அமைத்திருந்தால் இறுதிவரை ஐக்கிய தேசியக் கட்சியை பலப்படுத்தி ஆட்சியை கொண்டு நடத்தியிருப்பேன். தேர்தல்களில் தோற்றவரை மீண்டும் தலைமை அமைச்சராக நியமித்திருக்க மாட்டேன்.
இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை அரச நிதியில் வெளிநாடுகளுக்குச் சென்று ஊர் சுத்தியிருக்க மாட்டேன். நான் இரண்டரை ஆண்டுகள் அமைச்சுப் பதவியில் இருந்துள்ளேன். இந்தக் காலத்தில் நான் அரச நிதியில் ஒரு சந்தர்ப்பத்தில் கூட வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொண்டதில்லை. அரச நிதியை நான் ஒருபோதும் நாசமாக்கியிருக்க மாட்டேன்.
காலையில் ஒரு கதையும் பகல் வேறு கதையும் இரவில் இன்னொரு கதையுமாகக் கதைத்து நடவடிக்கை எடுத்திருக்க மாட்டேன். ஒரே வாக்குறுதியில் செயற்பட்டிருப்பேன். அதேபோல் வேறு ஒருவர் எழுதிய புத்தகத்துக்கு எனது மகளின் பெயரைச் சூட்டி “அரச தலைவரின் தந்தை” என்று புத்தகம் எழுதியிருக்க மாட்டேன். யாரோ ஒரு மகள் தனது தந்தைக்கு எழுதிய புத்தகத்தை நான் சொந்தம்கொண்டாடியிருக்க மாட்டேன்.
எனக்கு உயிர் அச்சுறுத்தல் என்று தெருவில் காணும் அனைவரிடமும் பொய்யாகக் கற்பனை செய்துகொண்டு கூறியிருக்க மாட்டேன். எனக்கு உயிர் அச்சம் ஒருபோதும் இல்லை. உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக நினைத்துக்கொள்வதும் ஒரு மனநோய். அதிகாரத்தை தக்கவைக்க வேண்டும் என்பதற்காக எவரையும் விலைகொடுத்து வாங்க நினைத்திருக்க மாட்டேன். ஊழல் என்பதை நாடாளுமன்ற உறுப்பினர் முதற்கொண்டு அரச தலைவர் வரை அனைவரும் தடுக்க வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு. மொரகாகந்த போன்ற நீர்த்தேக்கங்களை உருவாக்கிவிட்டு அங்கு சென்று ஒளிப்படங்களை எடுத்து நடித்துக்கொண்டு இருக்க மாட்டேன். இப்போது அந்த வயதை நாம் கடந்துவிட்டோம்.
அமெரிக்க போன்ற நாடுகளில் அரச தலைவர் உள்ளிட்டு உயர் அதிகாரிகள், பாதுகாப்பு அதிகாரிகள் அனைவரும் வருடத்துக்கு ஒருமுறை மனநிலைப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் தலைவர் அதிகமாக ஆயுதங்களுடன், இரகசியக் களஞ்சிய சாவிகளுடன் வாழ்வதனால் அவர்களின் மனநிலை பாதிக்கப்படக்கூடாது என்ற காரணத்துக்காக இவ்வாறு செய்வார்கள். அதிஷ்டவசமாக எமது நாட்டில் ஆயுத களஞ்சிய சாவிகள் அரச தலைவரிடம் இல்லை. அவ்வ◌ாறு இருந்திருந்தால் முதலில் எனது பக்கமே ஆயுதங்கள் திரும்பியிருக்கும். எவ்வாறு இருப்பினும் இங்கும் அரச தலைவர்கள் தமது மனநிலையைg; பரிசோதனை செய்ய வேண்டும் என்ற கட்டாய விதி ஒன்று அரசமைப்பில் உள்வாங்கப்பட வேண்டும். சபாநாயகர் தலையிட்டேனும் அவ்வாறான ஒரு நடவடிக்கையைக் கொண்டுவர வேண்டும் என்றார்.