(ஆதவன்)
இந்தியத் தேர்தல் ஆணையத்தால் வழங்கப்படும் வாக்காளர் அடையாள அட்டையைப் பெற்றுக்கொண்ட நளினி கிருபாகரன் என்ற ஈழத்தமிழ்ப் பெண்ணொருவர், வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்கவுள்ளார்.
இதன்மூலம் இந்தியத் தேர்தலொன்றில் வாக்களிக்கும் முதல் ஈழத்தவர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
இவர், 1986ஆம் ஆண்டு இராமேஸ்வரத்தில் உள்ள மண்டபம் பகுதியில் உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் இலங்கையில் இருந்து ஏதிலிகளாகச் சென்ற பெற்றோருக்குப் பிறந்திருந்தார். கடந்த 2021ஆம் ஆண்டு இவருக்கு இந்தியக் கடவுச்சீட்டு வழங்க மறுத்தபோது அதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தை அவர் நாடினார்.
மண்டபம் பகுதியில் அவர் பிறந்ததற்கான பிறப்புச் சான்றிதழை அவர் வைத்திருப்பதால், நளினிக்கு இந்தியக் கடவுச்சீட்டு வழங்குமாறு சென்னை உயர்நீதி மன்றத்தின் மதுரைக் கிளை நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கடந்த 2022ஆம் ஆண்டு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
நீதிமன்ற உத்தரவுக்கு அமைவாக அவருக்கு கடவுச்சீட்டு கிடைத்த பிறகும், மாவட்ட ஆட்சியரின் சிறப்பு அனுமதியின் பேரில், கொட்டப்பட்டு ஏதிலிகள் முகாமிலேயே தனது குடும்பத்துடன் தங்கியிருந்தார். இந்தியத் தேர்தல் ஆணையத்தால் வழங்கப்படும் வாக்கா ளர் அடையாள அட்டை இந்த வாரத் தொடக்கத்தில் நளினிக்கு கிடைத்துள்ளது. இதனால், எதிர்வரும் 19ஆம் திகதி தமிழகத்தில் இடம்பெறவுள்ள இந்திய மக்களவைத் தேர்தலில் வாக்களிக்கும் உரிமையை நளினி கிருபாகரன் பெற்றுள்ளார். (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.