தமிழ் மக்களின் உரிமைகளை எவ்வாறு தரும்:
சிறீரங்கேஸ்வரன் கேள்வி.....
இனிய பாரதி.
இணைந்திருந்த வடக்கு - கிழக்கு மாகாணத்தை உச்ச நீதிமன்றம் சென்று பிரித்த ஜே.வி.பி தமிழ் மக்களின் அதிகாரத்துக்கான நியாயமான உரிமைகளை எவ்வாறு தரும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக பேச்சாளர் ஐயாத்துரை சிறீரங்கேஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
யாழ் ஊடக அமையத்தில் இன்றையதினம் ஊடக சந்திப்பை மேற்கொண்ட அவர் இவ்வாறு தெரிவித்திருந்ததுடன் அவ்விடயம் தொடர்பில் மேலும் கூறுகையில்,
பிரபல ஆங்கில ஊடகமான சண்டே ரைம்ஸ் ஊடகத்திற்கு ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸ்சநாயக்க நாட்டில் பல ஆண்டுகளாக ஆட்சியாளர்களால் தொடர்ந்து மறுக்கப்பட்டுவந்த தமிழ் மக்களின் அதிகாரத்துக்கான நியாயமான உரிமைகளை உறுதி செய்வதோடு இலங்கையில் இனப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை பெற்றுக்கொடுத்து தேசத்தை மீண்டும் கட்டியெழுப்ப தன்னால் முடியும் என கூறியுள்ளார். அதேநேரம் 2019 ஆம் ஆண்டு தங்களது கொள்கை குறித்த ஆவணத்திலும் 13 ஆவது திருத்தம் மற்றும் மாகாணசபைகள் குறித்து தமது நிலைப்பாட்டை வெளியிட்டிரப்பதாகவும் சூசகமாக கூறியுள்ளார்.
இந்திய இலங்கை ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்தை தமிழர்களின் ஒரு நிலத் தொடருள்ள தாயக பூமியாக தமிழ் மக்கள் வாழ்வதை கூட விரும்பாத ஜே.வி.பி அதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தை நாடி வடக்கு கிழக்கை தனித்தனி மாகாணங்களாக பிரித்தது.
குறைந்தபட்சமாக வடக்கு கிழக்கு மாகாணத்தை தமிர்கள் ஒன்றிணைந்து வாழ்வதைக் கூட விரும்பாத இனவாத சிந்தனையுடன் செயற்பட்ட ஜே.வி.பி இப்போது ஜனாதிபதி தேர்தல் நடைபெறக் கூடும் என்ற சூழலில் தமிழ் மக்களுக்கான நியாயமான உரிமைகளை உறுதி செய்வதாக அந்த ஊடகத்திற்கு கூறியுள்ளார்.
இதிலிருந்து பட்டவர்த்தனமாக புலப்படுவது தேர்தலை இலக்குவைத்து சமிபத்தில் புலம்பெயர் தேசம் சென்றிரந்த ஜே.வி.பி தலைவர் அங்குள்ள அமைப்புகளின் கருத்துக்களை அறிந்து வாக்கை அபகரிக்கின்ற யுக்தியாக இவ்வாறான ஒரு கருத்தை சொல்ல முனைந்துள்ளார்.
உண்மையில் தமிழ் மக்களின் அரசியல் உரிமை மற்றும் தீர்வுகளை முன்னெடுக்கின்ற ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் ஜே.வி.பி எவ்வாறான முட்டுக்கட்டைகளை அரசாங்கங்களுக்கு போட்டிருந்தது என்பதை தமிழ் மக்கள் கண்ணூடக பார்த்துள்ளனர்.
கடந்த ஏப்ரல் 04 ஆம் திகதி யாழ்ப்பாணம் வலம்புரி விருந்தினர் விடுதியில் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துரைத்த ஜே.வி.பி தலைவர் நான் சமஷ்டியை தருவேன் என்றோ, 13 ஆவது திருத்தத்தை தருவேன் என்றோ இங்கு பேரம் பேச வரவில்லை என இனவாத மமதை கலந்த போக்குடன் கூறியிருந்தார்.
எனவே குறைந்தபட்சமாக உள்ள மாகாண முறைமையை கூட ஏற்றுக்கொள்ளாத ஜே.வி.பி தமிழ் மக்களுக்கு எவ்வாறு நியாயமான உரிமைகளை வழங்கும் என்றும் அவர் கேள்வி எழுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.