தமிழர் தாயகத்தில் 1995க்கு முன்னர், வான் பரப்பில் அடிக்கடி 'ஸீ-பிளேன்' வட்டமிட்டபடி இருக்கும். ஆனால் மக்கள் இந்த வானுர்தியைப் பற்றி அதிகம் அலட்டிக் கொள்வதில்லை. 'நொய்ங்ங்க்க்க்'என்று விண்கூவுவதைப் போல ரீங்காரமிட்டபடி பறந்து திரியும், 'ஸீ-பிளேன்' குண்டுகளை வீசுவதில்லை, துப்பாக்கிப் பிரயோகமும் செய்வதில்லை. சிலவேளைகளில் எப்போதாவது இராணுவத்தின் துண்டுப்பிரசுரங்கள் விசிறப்படுவதுண்டு. ஆனால், தமிழ்மக்கள் கண்டுகொள்ளாமல் இருந்தாலும் கூட, 'ஸீ-பிளேனின்' பறப்பால் ஏற்படும் விபரீதம் அடுத்தடுத்த நாள்களிலேயே தெரியவரும். எங்கெல்லாம் புலிகளின் நிலைகள், முகாம்கள், நடமாட்டம் இருக்கின்றதென அவதானித்து, உளவு சொல்வதே 'ஸீ -பிளேனின்' முதன்மைப் பணியாக இருந்தது. அந்த
உளவுத்தகவல்களை வைத்தே வானுர்திக் குண்டுவீச்சு நிகழும், எறிகணைகள் ஏவப்படும். இறுதிப்போர்க்
காலத்தில் 'ஸீ- பிளேன்' செய்த வேலையை 'வண்டு' என அழைக்கப்பட்ட ஆளில்லா வானுர்திகள் செய்தன. தேர்தல்காலம் நெருங்குவதால், இந்த உளவு வானுர்திகளைப் போல, சிங்கள அரசியல் தலைவர்கள் தமிழ்மக்களின் நாடி பிடித்துப் பார்க்க, வடக்குக்கு அடிக்கடி வரத் தொடங்கியிருக்கின்றனர்.
முதலில் தேசிய மக்கள் சக்தியின் அநுரகுமார வந்தார், பின்னர் அரசுத்தலைவர் ரணில் வந்தார், இப்போது சஜித் வரப்போகிறார், அவரைத் தொடர்ந்து மீண்டும் வடக்கே வருவதற்கான ஏற்பாடுகளை அநுரகுமாரவும் முன்னெடுத்துள்ளார். இம்முறை அரசுத்தலைவர் தேர்தல் களத்தில் இந்த மூவருமே பிரதான வேட்பாளர்களாக இருக்கப்போகின்றனர். கடந்த கால அரசுத்தலைவர் தேர்தல்களில் இருமுனைப் போட்டியே நிலவியிருந்தது. அதனால் தென்னிலங்கை வாக்காளர்கள் யாரை ஆதரிப்பதென முடிவெடுப்பதும் சுலபமாக இருந்தது. ஆனால் இம்முறை பலமான மும்முனைப்போட்டி ஏற்படப் போவது உறுதியாகிவிட்டது. இது தென்னிலங்கை வாக்காளர்களிடம், யாருக்கு வாக்களிப்பது என்பது தொடர்பாக இறுதிவரை முடிவெடுக்கமுடியாத குழப்பத்தை உண்டுபண்ணும். அத்தோடு சிங்கள மக்களின் வாக்குகள் மூன்று கூறுகளாகப் பிரியும். எனவேதான், சிறுபான்மை மக்களின் வாக்குகளை எப்படியாவது தம்பக்கம் திருப்பி விட்டால், வெற்றியை எட்டிவிடலாம் என்ற கணக்கோடுதான் வடக்கை நோக்கி இந்த மூன்று சிங்கள அரசியல் தலைவர்களும்
'ஸீ- பிளேன்' போல வட்டமடித்துக்கொண்டிருக்கிறார்கள்.
ஆனால், அவர்களின் இந்த மனக்கணக்கில் மண்ணள்ளிப் போடுவது போல, பொதுவேட்பாளர் என்ற எண்ணக்கரு தமிழ் மக்களிடையே விஸ்வரூபமெடுத்து, பல தரப்புகளின் ஆதரவும் அதற்குப் பெருகத் தொடங்கியுள்ளது. பொதுவேட்பாளர் ஒருவரை தமிழ்த் தரப்பு முன்னிறுத்தினால், தமிழ் மக்களின் பெரும்பாலான வாக்குகள் அந்தப் பொதுவேட்பாளருக்குக் கிடைத்தால் இந்த மூன்று சிங்களத் தலைவர்களின் கதியும் இலவு காத்த கிளியின் கதையாகிவிடும். எனவே இந்தப் பொது வேட்பாளர் என்ற விடயத்தைக் கருவிலேயே சிதைத்து விடும் நோக்கமும் அவர்களின் இந்த வடக்குக்கான வருகைகளின் பின்னால் ஒளிந்திருக்கின்றன. தமிழ் மக்கள் மீது தாம் அக்கறை கொண்டவர்கள் என்றும், தாம் அதிகாரத்துக்கு வந்தாலேயே தமிழ் மக்களுக்கு சலுகைகளை வழங்கமுடியும் என்றும் போலியான விம்பங்களை ரணில், சஜித், அநுரகுமார ஆகிய மூவரும் கட்டமைக்கத் தொடங்கியுள்ளனர். ஆனால் இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்த தங்களின் திட்டம் என்ன என்பது குறித்து மிகச் சாதுரியமாக இந்த மூவரும் வாயே திறப்பதில்லை. அவர்களின் திட்டமெல்லாம் ஆட்சிக்கதிரையில் அமர்வது மாத்திரமே தவிர தமிழ்மக்களின் பிரச்சினைகளை முந்திய தலைவர்கள் போல 'அதோ தீர்க்கிறோம், இதோ தீர்க்கிறோம்' என இழுத்தடிப்பதுதான். எனவே இந்தச் சிங்களத் தலைவர்களுக்கு பாடம் புகட்டவும், சர்வதேசத்துக்கும், சிங்கள மக்களுக்கும் எமது அபிலாஷை பற்றிய செய்தியை வெளிப்படுத்தவும் நமக்கிருக்கும் ஒரேயொரு துருப்புச் சீட்டு பொது வேட்பாளர் மட்டுமே. அதைத் தவறவிடுவோமானால், மீண்டும் செக்குமாடுகள் போல அதே பேச்சுவார்த்தை, வாக்குறுதி, ஒப்பந்தம், இழுத்தடிப்பு என தமிழினம் ஏமாற்று வட்டத்திலேயே சுற்றிக் கொண்டிருக்க வேண்டியதுதான்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.