(புதியவன்)
எதிர்வரும் 15ஆம் 16ஆம் திகதியளவில் வங்காள விரிகுடா கடல் பகுதியில் ஒரு தாழமுக்கம் உருவாகி, அது சூறாவளியாக வலுவடையும் சாத்தியம் உள்ளதாக ஓய்வுபெற்ற மூத்த மட்டக்களப்பு மாவட்ட வானிலை அவதான நிலையப் பொறுப்பதிகாரி கே.சூரியகுமாரன் தெரிவித்துள்ளார்.
சூறாவளி ஒன்று உருவாக வேண்டுமாக இருந்தால் அதற்கு தேவையான வானிலை நிபந்தனைகளில் கடல் வெப்பநிலையும் முக்கியமானதொன்றாகும். கடல் வெப்பநிலையானது 26.5 பாகை செல்சியஸுக்கு அதிகமாக காணப்பட்டால் சூறாவளி/தாழமுக்கம் உருவாவதற்கு சாத்தியம் காணப்படும்.
இதன்படி தற்போது வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தின் கடல் மேல்மட்ட வெப்பநிலையானது 31 பாகை செல்சியஸ் - 32 பாகை செல்சியஸ் அளவில் காணப்படுகின்றது. ஆகவே எதிர்வரும் சில நாட்களில் ஒரு தாழமுக்கம் உருவாகும் சாத்தியம் உள்ளது.
எதிர்வரும் 15ஆம் அல்லது 16ஆம் திகதியளவில் வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் ஒரு தாழமுக்கம் உருவாகி, அது 17ஆம், 18ஆம் திகதியளவில் மேலும் தீவிரமடைந்து, 19ஆம் 20ஆம் திகதியளவில் மேலும் அது வலுவடைந்து எதிர்வரும் 21ஆம், 22ஆம் திகதி அளவில் ஒரிசா கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இது சூறாவளியாக வலுவடைகின்ற சந்தர்ப்பத்தில் இதற்கு ரீமால் என்னும் பெயர் சூட்டப்படும் எனவும் இது ஒரிசா கடற்கரையை நோக்கி செல்வதாலும் தற்போது உள்ள வானிலை அமைப்பின் படியும் இலங்கைக்கு நேரடியான பாதிப்புகள் எதுவும் இருக்காது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.(ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.