இனியபாரதி.
இணுவில் காரைக்காலில் அமைந்துள்ள நல்லூர் பிரதேச சபையின் குப்பை கிடங்கினால் சுற்றுச்சூழல் பாதிப்பும் அதனால் அதனை சூழவுள்ள கிராம மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு வேண்டியும் போராட்டம் ஒன்று இன்று செவ்வாய்க்கிழமை(06) முன்னெடுக்கப்பட்டது.
கடந்த நான்கு, ஐந்து வருடங்களுக்கு மேலாக இணுவில் காரைக்கால் அம்மன் கோவிலுக்கு பின்புறமாகவுள்ள நல்லூர் பிரதேச சபைக்கு சொந்தமான குப்பைகளை கொட்டும் பகுதியில் மலை போல் குப்பைகளை குவித்து சுற்றுச்சூழலுக்கு பாதிப்பினை ஏற்படுத்துவதாக பிரதேச மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
குவிக்கப்படும் கழிவுகளினுள் மருத்துவ கழிவுகள், கால்நடைகளின் கழிவுகள் உள்ளிட்டவற்றை தீயிட்டு எரிப்பதன் ஊடாக அயலிலுள்ள கிராமங்களில் உள்ள மக்கள் பாதிக்கப்படுவதாக தெரிவித்தனர்.
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பாகவும் குறித்த குப்பைகளில் தீ பரவல் ஏற்பட்டு சுற்றுச்சூழலில் மக்கள் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டதாகவும் நேற்றைய தினமும் ஏற்பட்ட தீ விபத்தால் தாம் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்குவதாகவும் கண்டித்து இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது
மேலும் இங்கு பணிபுரிபவர்கள் பணத்தைப் பெற்று வேறு பகுதிகளில் உள்ள பொது குப்பை கழிவுகளையும் இங்கே போடுவதற்கு அனுமதி வழங்குவதாகவும் மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
எனவே இது தொடர்பில் நல்லூர் பிரதேச சபையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என மக்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
இதன்போது பதாதைகளைத் தாங்கியவாறு கோஷம் எழுப்பி பிரதேசத்திலுள்ள இளைஞர்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர். (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.