(புதியவன்)
கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு கைதிகள் பன்றி இறைச்சி உட்கொண்டதால் உயிரிழந்துள்ளனர்.
பன்றி இறைச்சி கறி சாப்பிட்டு உயிரிழந்த குறித்த சிறைக் கைதிகளின் உடல்கூற்றுப் பரிசோதனை தொடர்பில் இறப்பு விசாரணை அதிகாரி நீதிமன்றத்தில் வெளிப்படையான அறிக்கை ஒன்றை வழங்கியுள்ளார்.
இதன்படி, இருவரது உடல் உறுப்புகளையும் மேலதிக பரிசோதனைகளுக்காக கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்துக்கு அனுப்பி வைக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொரளை மற்றும் தெஹிவளை பிரதேசத்தில் வசிக்கும் இருவர் ஐஸ் போதைப்பொருளை கடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு மெகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
நேற்று முன்தினம் கைதி ஒருவரின் வீட்டில் தயாரிக்கப்பட்ட பன்றி இறைச்சியுடன் கூடிய சோறு பொதி ஒன்றை உறவினர்கள் கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.
அந்த சோற்றுப் பொதியை சுமார் 15 கைதிகள் சாப்பிட்டுள்ளதுடன் 3 கைதிகள் ஒவ்வாமை காரணமாக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் 2 கைதிகள் உயிரிழந்துள்ளதாகவும், ஆபத்தான நிலையில் உள்ள மற்றொரு கைதி தற்போது கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்த இருவரினதும் இறப்பு விசாரணைகள் நேற்று (07) மேற்கொள்ளப்பட்டு அங்கு இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இந்த சம்பவம் தொடர்பில் சிறைச்சாலைப் பணிமனை மட்டத்தில் விசாரணை நடத்தப்படும் என சிறைச்சாலைப் பணிமனை தெரிவித்துள்ளது.(ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.