(செல்வன்)
புதுக்குடியிருப்பு வள்ளிபுனம் பகுதியில் வாகனம் ஒன்றிற்குள் சூட்சுமமான முறையில் பாலை மரக்குற்றிகளை கடத்த முற்பட்ட வேளை கனரகவூர்தியையும் அதன் சாரதியினையும் புதுக்குடியிருப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து வள்ளிபுனம் பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற கனரகவூர்தி தேராவில் வன இலாகாவிற்கு முன்பாக சென்றுகொண்டிருந்த போது இன்று (19.05.2024) அதிகாலை வழிமறித்து சோதனை செய்த போது கனரகவூர்திக்குள் பாலை மரக்குற்றிகள் துண்டங்களாக போடப்பட்டு அதன்மேல் தண்ணீர் போத்தல்கள், ஊதுபத்தி ,வெற்று பெட்டிகளை கொண்டு மறைத்து வெளி மாவட்டத்திற்கு கொண்டு செல்லமுற்பட்ட போது இவை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
ரெட்பானா விசுவமடு பகுதியை சேர்ந்த வாகன சாரதியே இதன் போது கைது செய்யப்பட்டுள்ளதுடன் மீட்கப்பட்ட பாலைமரக்குற்றிகள் மற்றும் கனரகவூர்தியையும் 46 வயதுடைய சந்தேக நபரையும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் புதுக்குடியிருப்பு பொலிஸார் ஈடுபட்டுள்ளார்கள்.
கடந்த சில நாட்களுக்கு முன்பதாக புதுக்குடியிருப்பு பகுதியிலே முல்லைத்தீவு பொலிஸாரால் பல நூற்றுக்கணக்கான முதிரைக் குற்றிகள் கைப்பற்றப்பட்டிருந்த பின்னணியில் இந்த விடயம் புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு பாரிய சிக்கலாக மாறிய நிலைமையில் இன்றைய தினம் இந்த மரங்கள் புதுக்குடியிருப்பு பொலிஸாரால் மீட்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது
தொடர்ச்சியாக புதுக்குடியிருப்பு பொலிஸார் மரக்கடத்தல் காரர்களுக்கு ஒத்துழைக்காமல் இவ்வாறு தொடர்ச்சியாக கைது செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுகின்றனர்.(ப)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.