(புதியவன்)
முல்லைத்தீவு, முத்தையன் கட்டில் வாய்க்காலில் குளித்துக் கொண்டிருந்த பெண்களை கையடக்க தொலைபேசியில் காணொலி எடுத்த இளைஞன் நையப்புடைக்கப்பட்டு, எச்சரிக்கப்பட்டுள்ளார். நேற்று சனிக்கிழமை காலையில் இந்த சம்பவம் நடந்தது.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மாணவிகள் சிலர், புதுக்குடியிருப்பிலுள்ள தமது நண்பியொருவரின் வீட்டுக்கு சென்று, அவரின் உறவினர் வீடு அமைந்துள்ள முத்தையன்கட்டில் நீரோடும் வாய்க்காலில் மாணவிகள் குளித்துக் கொண்டிருந்த போது, உந்துருளியில் வந்த இரண்டு இளைஞர்கள் மாணவிகளுடன் ஆபாசமாக பேசியுள்ளனர்.
சிறிது தூரம் சென்று மீண்டும் உந்துருளியில் வந்த இளைஞர்கள் இருவரும், மாணவிகள் குளிப்பதை காணொலி எடுத்துள்ளனர். அந்தப் பகுதியில் சுற்றி வட்டமடித்து தொடர்ந்து காணொலி எடுத்துள்ளனர்.
இதன்போது, மாணவியொருவர் குளிப்பதற்காக கொண்டு வந்த அலுமினிய வாளியை இளைஞர்கள் மீது வீசியுள்ளார். உந்துருளியை செலுத்தி வந்தவரின் தலையில் வாளி பட்டு, இருவரும் நிலைகுலைந்து சரிந்து விழுந்துள்ளனர்.
மாணவிகள் சத்தமிட்டபடி வீதிக்கு ஓடிவர, உந்துருளியை செலுத்தி வந்தவர் எழுந்து உந்துருளியுடன் ஓடிவிட்டார். பின்னாலிருந்து காணொலி எடுத்தவரை மாணவிகள் பிடித்ததுடன், இந்த களேபரத்தை அவதானித்த பிரதேச இளைஞர்கள் சிலர் வந்து அந்த இளைஞனை நையப்புடைத்தனர்.
அவரது கையடக்க தொலைபேசியில் காணப்பட்ட மாணவிகள் குளித்த காணொலிகள் அனைத்தும் அழிக்கப்பட்டதுடன் இளைஞனின் மேலாடைகள் களையப்பட்டு, நையப்புடைக்கப்பட்டார். மாணவிகளும் அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.