தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீடிப்பதாக இந்திய அரசாங்கம் அறிவித்திருக்கின்றது. 2009ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்ட பின்னர், பல நாடுகள் புலிகள் மீதான தடையை மறுபரிசீலனை செய்திருக்கின்றன. சில நாடுகள் தடையைக் கைவிட்டிருக்கின்றன. இன்னும் சில நாடுகள் தளர்வுப் போக்கைக் கடைப்பிடிக்கின்றன. ஆனால், இந்திய அரசாங்கமோ எந்த விட்டுக்கொடுப்பும் இல்லாமல் புலிகள் மீதான தடையைத் தொடர்ந்தும் இறுக்கமாகவே நடைமுறைப்படுத்தி வருகின்றது. இதன் தொடர்ச்சியாகவே ஆயுத மௌனிப்பின் பதினைந்து ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் ஒருமுறை தடை தூசுதட்டப்பட்டு, மேலும் ஐந்து ஆண்டுகளுக்குத் தடை நீடிக்கப்பட்டிருக்கின்றது.
விடுதலைப்புலிகள் இயக்கம் தமிழ்நாட்டில் இரகசியமாகச் செயற்படுகிறது, அனைத்துத் தமிழர்களுக்குமான தனி நாடு என்ற கோரிக்கையில் புலிகள் அமைப்பு தொடர்ந்தும் வலுவாகவே உள்ளது, இந்தியாவின் இறையாண்மை, ஒருமைப்பாடு ஆகியவற்றுக்கு புலிகளின் நோக்கம் எதிரானது மட்டுமல்லாமல், இந்தியாவின் பாதுகாப்புக்கும் அந்த அமைப்பு அச்சுறுத்தலாகவே உள்ளது என்பனதான் புலிகள் மீதான தடைக்கு இந்தியா கூறும் கற்பிதங்களாக அமைந்திருக்கின்றன. இங்குதான், 'பூசணிக்காயை மட்டுமல்ல முழுப்பூசணித் தோட்டத்தையே சோற்றில் மறைக்கும்' பாரதத்தின் கபடத்தனம் அம்பலமாகியிருக்கின்றது.
ஸ்ரீலங்காவில் வடக்கு - கிழக்கு இணைந்த தாயகத்தைத்தான் தங்கள் தாகமாக விடுதலைப் புலிகள் கொண்டிருந்தார்களே தவிர, அவர்கள் ஒருபோதும் தங்களின் 'ஆயுதத் தாக்குதல் தளமாக' இந்தியாவைக் கொண்டிருக்கவில்லை. இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கோ, இறையாண்மைக்கோ, பிராந்திய நலன்களுக்கோ எதிராக ஒருபோதும் விடுதலைப்புலிகள் செயற்பட்டதில்லை. மேலும் இந்தியாவின் பகை நாடுகளுடன் எந்த வகையான உறவையும் விடுதலைப்புலிகள் வைத்துக் கொண்டதுமில்லை. இது இந்தியாவுக்கும் நன்கு தெரியும்.
இன்னும் சொல்லப்போனால், விடுதலைப் புலிகளின் இருப்பு 'நெல்லுக்கிறைத்த நீர் புல்லுக்குப் பொசிந்தாற்போல்' இந்தியாவின் பாதுகாப்பையும்தான் உறுதிப்படுத்தியிருந்தது. 2009ஆம் ஆண்டுக்கு முன்னர் சீன ஆய்வுக் கப்பல்கள் இலங்கையின் எல்லைக்குள் - இந்தியாவுக்கு நெருக்கமாகப் பயணித்ததாக அறிந்த துண்டா? பாகிஸ்தானினதும், சீனாவினதும் இராணுவக் கூட்டணி மாலைதீவுக் கடற்பரப்பை மையப்படுத்தி நகர்ந்ததாகக் கேட்டதுண்டா? இங்கே காக்கப்பட்டது புலிகளின் நலன்கள் மட்டுமல்ல, மாறாக இந்திய நலன்களும் அதன் இறையாண்மையும்தான். ஆனால், புலிகள் இல்லாத இன்றைய ஸ்ரீலங்காவின் நகர்வால் இந்தியா திருப்திப்பட்டுவிட முடியுமா? சீனா மிகச்சாதாரணமாக நடமாடுகின்றது, அணிசேராக் கொள்கை என்ற பெயரில் பிராந்திய வல்லரசான இந்தியாவின் கண்களுக்குள் விரல்விட்டு ஆட்டிக்கொண்டிருக்கின்றது இலங்கை. ஆதலால், புலிகள் மீதான தடைக்கு முன்னர் இந்தப் புரிதல்களை பாரதம் தன்னுள் ஏற்படுத்திக் கொள்ளவேண்டும்.
அல்லாமலும், பாரதம் பற்றிய புரிதல்களை தமிழ்த் தேசியத் தலைமைகள் ஏற்படுத்திக்கொள்ள வேண்டிய காலமும் இதுதான். இந்தியாவே ஆபத்பாந்தவன் என்றெண்ணிக் கொண்டிருக்கும் தமிழர்களை விரல் விட்டு எண்ணிவிட முடியாத அளவுக்கு பாரதம் இதுவரை முதுகில் குத்தியிருக்கின்றது- வதைத்தெறிந்திருக்கின்றது. ஸ்ரீலங்கா அரசாங்கத்துக்கு பாரதம் பணிகின்றது என்றால், அணிசேராக் கொள்கை என்ற பெயரில் ஸ்ரீலங்கா அரசாங்கம் கொண்டுள்ள மாற்றுக்கொள்கைகள்தான் காரணம். எனவே இந்த விடயத்தில் இந்தியாவே சரணம் என்ற நிலைப்பாட்டை தமிழ்த் தலைமைகள் மறுபரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும். சாதாரண கீரைக் கடைக்கே எதிர்க்கடை இருக்கும்போது...
#ஆசிரியர்_தலையங்கம் #வாசகர்கடிதம் #உதயன் #eelam #eelamnews #jaffnanews #uthayannews #recentnews #breaking
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.