கதறுகின்றார் கம்மன்பில
(ஆதவன்)
பன்னாட்டு மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம், முள்ளி வாய்க்கால் சென்று புலிகளின் நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்றுள்ளார். வெளிநாட்டவர் ஒருவர் இங்கு வந்து இராணுவத்தினரைக் கொன்றவர்களை நினைவுகூரும்வரை அரசு மௌனம் காத்தமை அதன் கையாலாகத்தனத்தையே வெளிப்படுத்துகின்றது என்று நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-
"போரில் உயிரிழந்தவர்களை நினைவு கூருவதற்கு அவர்களின் உறவுகள் மற்றும் நண்பர்களுக்கு இருக்கும் உரிமையை நாம் நிராகரிக்கவில்லை. ஆனால் கொடூரமான பயங்கரவாதிகளை நினைவுகூருவதற்கு உலகில் எங்கும் அனுமதி கிடையாது. நீதிமன்றத்தால் தடைவிதிக்கப்பட்டிருந்த நிலையிலும் வடக்கு, கிழக்கு மற்றும் கொழும்பில் பயங்கரவாதிகள் நினைவுகூரப்பட்டுள்ளனர். அதற்கான நிகழ்வுகள் நடத்தப்பட்டுள்ளன.
இதனைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காத அரசு, இதற்கு எதிராகச் செயற்பட்டவர்களைக் கைதுசெய்து தனது இயலாமையை வெளிப்படுத்தியுள்ளது. புலிகளை நினைவுகூருவதற்கு நாட்டில் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படும்போது அது தொடர்பில் மௌனம்காத்த தலைமை அமைச்சர். 'போர் வீரர்களை' நினைவுகூரும் தேசிய நிகழ்வில் பிரதம அதிதியாக பங்கேற்பது வெட்கப்பட வேண்டிய விடயமா கும்.
வெள்ளமுள்ளிவாய்க்காலில் நடைபெற்ற புலிகளுக்கான நினைவேந்தல் நிகழ்வில் பன்னாட்டு மன்னிப்புச் சபையின் செயலாளர் பங்கேற்றுள்ளார். வெளிநாட்டவர் இங்கு வந்து, இராணுவத்தினரை, அப்பாவி மக்களை கொன்ற பயங்கரவாதிகளை நினைவு கூரும்வரை அரசு அமைதி காத்துள்ளது. பன்னாட்டு மன்னிப்புச் சபையின் செயலாளருக்கு இலங்கையில் மட்டுமே தனது விளையாட்டைக் காட்ட முடிந்துள்ளது, இந்தியா, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு சென்று பயங்கரவாதிகளை நினைவுகூர முடியுமா? ஏன் மன்னிப்புச் சபையின் செயலாளரின் தாய் நாடான பிரான்ஸுக்குச் சென்று அதனைச் செய்யமுடியுமா? ஏனெனில் அவ்வாறு செய்ய முற்பட்டால் அந்த நாட்டு அரசும், தேசப்பற்றுள்ள மக்களும் அதனைத் தடுத்து நிறுத்திவிடுவார்கள்" - என்றார். (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.