(புதியவன்)
இலங்கையின் உள்நாட்டுப் போரின் இறுதித் தருணங்களில் இராணுவத்திடம் சரணடைந்த குடும்பங்களின் குழந்தைகள் எங்கே? அவர்களுக்கு என்ன நடந்தது? என கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் வைத்து பன்னாட்டு மன்னிப்புச்சபையின் செயலாளர் நாயகம் அக்னெஸ் கலமார்ட் கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடக்குக்கான எனது பயணம் குறிப்பிடத்தக்கது. இலங்கையின் உள்நாட்டுப் போர் முடிவடைந்து 15 வருடங்களாகின்ற காலப்பகுதியில் எனது இந்தப் பயணம் இடம்பெற்றுள்ளது. இந்த காலப்பகுதியில் பல்லாயிரக்கணக்கானவர்கள் காணாமலாக்கப்பட்டனர் .
இந்த வருடம் இலங்கையில் நாடாளுமன்ற மற்றும் அரச தலைவர் தேர்தல்கள் இடம்பெறவுள்ளதால் இந்த வருடமே இலங்கையின் தலைவிதியையும் மனித உரிமை பாதுகாப்பின் எதிர்காலத்தையும் தீர்மானிக்கும்.
நான் ஏன் இலங்கைக்குப் பயணித்தேன்?
இலங்கையின் உள்நாட்டுப் போர் முடிவடைந்து 15 வருடங்களாகின்ற நிலையில் இலங்கையின் மனித உரிமை நிலவரம் குறித்து அறிந்துகொள்வதற்காகவே நான் இந்தப் பயணத்தை மேற்கொண்டேன்.
இலங்கையில் நீதியை நிலைநாட்ட நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை அறியவும் போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பன்னாட்டு மன்னிப்புச்சபையின் ஆதரவை வழங்கவுமே நான் இந்தப் பயணத்தை மேற்கொண்டேன்.
நான் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் கலந்துகொள்வதற்காக வடக்குக்குப் பயணம் மேற்கொண்டேன். காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்பங்களை சந்தித்தேன். அவர்கள் வெளிப்படுத்திய துணிச்சலும், மீள்எழுச்சிச் தன்மையும், நீதியைக் காண்பதற்கான அவர்களின் உறுதிப்பாடும் எனது மனதை தொட்டன.
இலங்கையில் மிகப்பெருமளவானவர்கள் காணாமல்போயுள்ளனர். அவர்களுக்கு என்ன நடந்தது. காணாமல்போதல் என்பது மிகவும் மோசமான வன்முறை. அது ஒருபோதும் முடிவுக்கு வராது.
உங்களுக்குத் தெரியாது... பாதிக்கப்பட்டவர்களுக்கு வருடங்கள் பல கடந்தும் இந்த வலி தொடரும்... சாவை விட இது வலி மிகுந்தது... வலியும் வேதனையும் மிக மோசமானதாகக் காணப்படும்... உளவியல் சித்திரவதை... ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாரமும் தசாப்தங்கள் கடந்தும் இந்த வலியும் வேதனையும் தொடரும்...
இது இலங்கையின் மீது விழுந்த கறை. இந்தக் கறையை அகற்ற ஒவ்வொரு இலங்கை பிரஜையும் முன்வரவேண்டும். நான்கைந்து மாதக் குழந்தைகள்... மூன்று நான்கு வயதானவர்கள்... அந்த குழந்தைகள் எல்லாம் எங்கே... நான் அவர்களின் படங்களை பார்த்திருக்கின்றேன். 15 வருடங்களாகியும் எவ்வித பதில்களும் இல்லை... இது மிகவும் நீண்டவொரு காலம்.
இது மன்னிக்க முடியாத குற்றம், இவர்களுக்கு சிறிலங்கா அரசாங்கம் பதிலளிக்க வேண்டும். இவர்கள் தாங்களாக முன்வந்து சரணடைந்தவர்கள். சரணடையும் பகுதிகளுக்கு தாங்களாக சென்று சரணடைந்தார்கள். எங்கே அந்த குழந்தைகள்? என்றார். (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.