(மாதவன்)
கிளிநொச்சி மாவட்டத்தில் இராணுவ ஆக்கிரமிப்புக்கள் அதிகரித்துள்ள நிலையில் அதை எதிர்த்து குரல் எழுப்ப வேண்டிய மக்கள் பிரதிநிதிகள் அமைதியாக இருக்கின்றார்கள். இவர்கள் அரசுக்கு துணைபோய்விட்டார்கள் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளரும் சட்டத்தரணியுமான க.சுகாஸ் தெரிவித்தார்.
கிளிநொச்சி சந்திரன் பூங்காவில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நாச்சிகுடாவில் தமிழ் பாடசாலையின் பெயரை மாற்றுகின்றார்கள். உருத்திரபுரீஸ்வரர் ஆலயத்தில் அகழ்வுக்காக விகாரையை தேடுகின்றார்கள். இந்நிலையில் தற்போது கிளிநொச்சியின் மையத்தில் அமைந்திருக்கும் சந்திரன் பூங்காவை ஆக்கிரமிப்பதற்கு இராணுவம் முற்பட்டுள்ளது. இதை நாங்கள் பார்த்துக் கொண்டிருக்க முடியாது.
தற்போது கிளிநொச்சியில் சரியான மக்கள் பிரதிநிதிகள் இல்லை. அனைவரும் அரசுக்கு விலை போய் விட்டார்கள். இந்த வாய்ப்பை பயன்படுத்தி அரசும் இராணுவமும் கிளிநொச்சி மண்ணை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றது.
இராணுவம் உடனடியாக ஆக்கிரமிப்புக்களை நிறுத்த வேண்டும். அல்லது இன்னமும் பல்லாயிரக்கணக்கான மக்களை திரட்டி இராணுவத்தின் ஆக்கிரமிப்பிற்கு எதிராக நாங்கள் தொடர்ந்து போராடுவோம் என்றார்.(ஞ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.