இந்து மத புராணங்களின் படி, சிவ பெருமான் ஆதியும் அந்தமும் இல்லாதவர். தாயின் கருவில் உதிக்காதவர் என்பதால் சிவ பெருமான் எடுக்கும் ரூபங்களை அவதாரம் என குறிப்பிடுவது கிடையாது. பக்தர்களை காப்பதற்காகவும், அவர்களுக்கு அருள் செய்வதற்காகவும் சிவ பெருமான் பல வடிவங்களை எடுத்துள்ளார். பொதுவாக சிவனின் வடிவங்களை உருவம், அருவம், அருவுருவம் என மூன்று விதங்களாக வகைப்படுத்துவார்கள். இவற்றில் உருவம் என்பது சாதாரண மனிதர்களை போன்ற உருவ அமைப்பாகும். அருவம் என்பது லிங்க வடிவத்தை குறிக்கும். அருவுருவம் என்பது சதாசிவ நிலை எனப்படும் முகலிங்கத்தை குறிப்பதாகும். அதாவது மனித முகமும், லிங்க திருமேனியும் கொண்ட அமைப்பாகும்.
மகாபுராணம் உள்ளிட்ட புராணங்களின் அடிப்படையில் பஞ்சகுணங்களை உணர்த்தும் வகையில் சிவனை ஐந்து மூர்த்தர்களாக வகைப்படுத்துகிறார்கள். இவை உக்ர மூர்த்தி, சாந்த மூர்த்தி, வசீகர மூர்த்தி, ஆனந்த மூர்த்தி, கருணா மூர்த்தி ஆகியவை ஆகும். சிவ ஆகமங்களின் படி சிவ பெருமான் ஐந்து முகங்களை உடையவர் என சொல்லப்படுகிறது. ஈசானம், தற்புருசம், அகோரம், வாமதேவம், சத்யோசாதம் என்பன சிவ பெருமானின் முகங்களாகும்.
இந்த ஐந்து முகங்களில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான பலனை தரக் கூடியவை ஆகும். இந்த ஐந்து முகங்களை தனித்தனி ரூபங்களாக கொண்டு 25 திருநாமங்களில், 25 தலங்களில் சிவ பெருமான் காட்சி தருகிறார். சிவனின் இந்த 25 திருநாமங்கள் மற்றும் அவைகள் அமைந்துள்ள தலங்களின் விபரத்தை இங்கே காணலாம்.
சிவனின் 25 வடிவங்கள் :
1.சோமாஸ்கந்தர் - திருவாரூர்
2. நடராஜர் - சிதம்பரம்
3. ரிஷபாரூடர் - வேதாரண்யம்
4. கல்யாணசுந்தரர் - திருமணஞ்சேரி
5. சந்திரசேகரர் - திருப்புகலூர்
6. பிட்சாடனர் - வழுவூர்
7. காமசம்ஹாரர் - குறுக்கை
8. காலசம்ஹாரர் - திருக்கடையூர்
9. திரிபுராந்தகர் - திருவதிகை
10. கஜசம்ஹாரர் - வழுவூர்
11. வீரபத்திரர் - திருப்பறியலூர்
12. தட்சிணாமூர்த்தி - ஆலங்குடி
13. கிராதகர் - கும்பகோணம்
14. கங்காளர் - திருச்செங்காட்டங்குடி
15. சக்ரதானர் - திருவீழிமிழலை
16. கஜமுக அனுக்கிரக மூர்த்தி - திருவலஞ்சுழி
17. சண்டேச அனுக்கிரகர் - கங்கை கொண்ட சோழபுரம்
18. ஏகபாதமூர்த்தி - மதுரை
19. லிங்கோத்பவர் - திருவண்ணாமலை
20. சுகாசனர் - காஞ்சிபுரம்
21. உமாமகேஸ்வரர் - திருவையாறு
22. அரியர்த்த மூர்த்தி - சங்கரன்கோவில்
23. அர்த்தநாரீஸ்வரர் - திருச்செங்கோடு
24. நீலகண்டர் - சுருட்டப்பள்ளி
25. சலந்தராகரர் - திருவிற்குடி
* ஈசானம் - சோமாஸ்கந்தர், நடராஜர், இரிடபாரூடர், சந்திரசேகரர், கல்யாணசுந்தரர்
* தற்புருசம் - பிட்சாடனர், காமசம்ஹாரர், சலந்தராகரர், கால சம்ஹாரர், திரிபுராந்தகர்
* அகோரம் - கசசங்ஹாரர், வீரபத்திரர், தட்சிணாமூர்த்தி, நீலகண்டர், கிராதர்
* வாமதேவம் - கங்காளர், கசாரி, ஏகபாதர், சக்ரதானர், சண்டேசர்
* சத்யோசாதம் - லிங்கோத்பவர், சுகானர், அர்த்தநாரீஸ்வரர், அரியர்த்த மூர்த்தி, உமாமகேஸ்வரர்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.