(எழிலன்)
முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அணிஞ்சியன்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார். சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இன்று (23) காலை 6.10 மணியளவில் ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றுகின்ற பணியாளர்களை ஏற்றுகின்ற பேருந்து ஒன்று, பின்னால் வந்த மோட்டார் சைக்கிளை கவனிக்காது மாங்குளம் வெள்ளாங்குளம் பிரதான வீதியில் இருந்து அணிஞ்சியன்குளம் 2 ம் பகுதி ஸ்ரீ ஷீரடிசாய்பாபா இல்ல வீதிக்கு திரும்பியபோது மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் பேருந்துடன் மோதி குறித்த விபத்து சம்பவித்துள்ளது. குறித்த சம்பவத்தில் MAG மனிதநேய கண்ணிவெடி அகற்றும் பிரிவில் பணியாற்றி வரும் ஒருவர் பேருந்து சில்லுக்குள் சிக்குண்டு இறந்ததாகவும், மற்றைய நபர் பேருந்துடன் மோதியதில் தூக்கி வீசப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த நபர் மல்லாவி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். உயிரிழந்த மற்றைய நபர் கிளிநொச்சி அக்கராயன் பிரதேசத்தை சேர்ந்த 48 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான கந்தையா சிவநாதன் என்பவராவார். மேலும் சம்பவ இடத்துக்கு சென்ற மல்லாவி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் குறித்த பகுதியில் குறித்த பேருந்து சாரதி வழமையாக வேகமாக செல்வதாகவும் இதற்கு முன்னரும் இதே பேருந்து குறித்த பகுதியில் விபத்துக்குள்ளானதாகவும் அண்மையிலும் இந்த பேருந்து மாடு ஒன்றை மோதி மாடு இறந்ததாகவும் இவ்வாறான பொறுப்பற்ற சாரதிகளை ஆடைத்தொழிற்சாலை நிர்வாகம் கவனிக்க வேண்டும் எனவும் பொலிசார் இவ்வாறான சாரதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மக்கள் கோரியுள்ளனர். (ஐ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.