எழிலன்
மட்டக்களப்பு கிரான் தரவை மாவீரர் துயிலும் இல்ல செயற்பாட்டுக் குழுவின் உறுப்பினரான நிதர்சன் உட்பட 4 பேர் நேற்று மாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். நினைவேந்தல் நிகழ்வுக்காக ஈகச்சுடர் ஏற்றுவதற்காக மாவீரர்களின் உறவுகள் காத்திருந்தவேளை இச்சம்பவம் இடம்பெற்றது. திடீரென உள்நுழைந்த பொலிஸார் நினைவேந்தல் நிகழ்வை நடத்துவதற்கு இடையூறு ஏற்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டதுடன் அங்கு அலங்கரிக்கப்பட்ட கொடிகளை அகற்றினர். இதனைக் கண்டித்து நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன் மற்றும் செல்வராஜா கஜேந்திரன் ஆகியோர்கள் பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட் டனர். ஈகச்சுடரேற்றுவதற்கு 5 நிமிடமாவது தாருங்கள் எனக் கெஞ்சிக்கேட்டும் நேரம் வழங்காமல் திடீர் செயற்பாட்டிஸ் ஈடுபட்டனர்.
வழமை போன்று கிரான் தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் உயிர்நீத்த தமது உறவுகளை நினைவுகூரும் முகமாகவும் ஈகச் சுடரேற்றி நினைவேந்தலை மேற்கொள்ளும் முகமாக குறித்த நேரமான மாலை 6.05 நிமிடம் வரை காத்திருந்தனர். இதன்போது கலகம் அடக்கும் பொலிஸாருடன் உள்நுழைந்த பொலிஸ் உயர் அதிகாரிகள் நினைவேந்தல் நடத்துவதற்குத் தடை ஏற்படுத்தியதுடன் அங்கு அலங்கரிக்கப்பட்ட சிவப்பு, மஞ்சள் நிறக் கொடிகளை அகற்றினார்கள். அத்துடன் ஒலிபெருக்கி சாதனங்கள் மற்றும் ஏனைய பொருள்களையும் கைப்பற்றி பொலிஸ் நிலையத்துக்குக் கொண்டு சென்றனர்.
பொலிஸாரின் அடாவடி இடம்பெறும் போது மாவீரர்களின் உறவுகள் ஈகச் சுடரை அச்சத்துடன் விரைவாக ஏற்றி விட்டு அங்கிருந்து விலகிச் சென்றனர். இச்சம்பவமானது பிரதேசத்தில் அசாதாரண சூழ்நிலையை ஏற்படுத்தியதுடன் மக்களிடையே பதற்றத்தையும் ஏற்படுத்தியிருந்தது. நிகழ்வு நடைபெற்ற பிரதேசத்தில் அதிகளவு பொலிஸார். இராணுவத்தினர் மற்றும் இராணுவக் கவச வாகனங்கள் என்பன கைதிகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் என்பன முன்னெச்சரிக்கையாக தயாரான நிலையில் வைக்கப்பட்டிருந்தது. (எ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.