எழிலன்
கொக்குத்தொடுவாயில் மனிதப்புதைகுழியில் இதுவரை 39 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் மீட்கப்பட்டுள்ள நிலையில், இரண்டாம் கட்ட அகழ்வாய்வு நடவடிக்கைகள் நேற்றுடன் இடைநிறுத்தப்பட்டுள்ளன. புதைகுழி முற்றுமுழுதாக ஆராயப்பட வேண்டுமென்ற நிலைப்பாட்டிலேயே அனைவரும் உள்ளனர்.
எதிர்வரும் வருடம் மார்ச் முதலாம் திகதி தொடக்கம் ஒரு மாத காலத்துக்கு அகழ்வுப் பணிகள் இடம்பெறவுள்ளன என்று மனிதப்புதைகுழி அகழ்வுப்பணிகளுக்கு பொறுப்பான சட்ட மருத்துவ அதிகாரி கனகசபாபதி வாசுதேவா தெரிவித்தார்.
மூன்றாம் கட்ட அகழ்வு ஆய்வுப்பணிகளை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதலாம் திகதி ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்று அகழ்வு நடவடிக்கைகளுடன் தொடர்புடைய சட்டத்தரணி வி.கே. நிரஞ்சன் தெரிவித்தார்.
கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியின் அகழ்வாய்வு நடவடிக்கைகள் கடந்த செப்ரெம்பர் மாதம் 6 ஆம் திகதி ஆரம்பமானது. இதுவரை முதலாம் கட்டம், இரண்டாம் கட்டம் என மொத்தமாக 20 நாள்கள் அகழ்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்த அகழ்வு நடவடிக்கைகளில் 39 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் மீட்கப்பட்டுள்ளன. அத்துடன் ஆடைகள். துப்பாக்கிச் சன்னங்கள். விடுதலைப் புலிகள் அமைப்பின் இலக்கத் தகடுகள் உட்பட பல தடயப்பொருள்களும் மீட்கப்பட்டுள்ளன.
புதைகுழியானது கொக்கிளாய், முல்லைத்தீவு நெடுஞ்சாலையில் 1.7 மீற்றர் நீளத்துக்கு நெடுஞ்சாலையை நோக்கி விரிவடைந்துள்ளமை 'ஸ்கான்' பரிசோதனை ஊடாக தெரியவந்துள்ளது என்று மனிதப்புதைகுழி அகழ்வுப் பணிகளுக்குப் பொறுப்பான சட்ட மருத்துவ அதிகாரி கனகசபாபதி வாசுதேவா தெரிவித்தார்.
முல்லைத்தீவு நீதிமன்றில் இடம்பெற்ற கலந்துரையாடல்களுக்கு பின்னர் இடம் பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்த அகழ்வுப் பணிகளை இலகுபடுத்துவதற்கும். ஒழுங்குபடுத்துவதற்கும் ஒரு அதிகாரி நியமிக்கப்படவுள்ளார். அதற்கான உத்தரவை நீதிவான் மாவட்டச் செயலருக்கு வழங்கியுள்ளார். பகுப்பாய்வுகள் டிசெம்பர் மாதம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார். [எ]
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.