(செல்வன்)
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட வசந்தபுரம் பேராற்றினை அண்டிய பகுதியில் இடம் பெற்று வரும் மணல் அகழ்வினை உடனடியாக நிறுத்தக் கோறி வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் விநோகராதலிங்கத்தினால் கடந்த (29.01.2024) முல்லைத்தீவு மாவட்டச்செயலருக்கும் பணிமனை பிரதிநிதிகளுக்கும் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த விடயம் தொடர்பில் கடந்த (16.02.2024) முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட்து.
இதன் போது குறித்த பகுதியினை (20.02.2024) அன்று பணிமனை அதிகாரிகள் கள விஜயம் செய்து பார்வையிட்டு அறிக்கை சமர்ப்பித்து அதற்கான முடிவினை எடுக்க வேண்டும் என முடிவெடுக்கப்பட்டமைக்கு அமைய கடந்த (20.02.2024) கனியவள பணிமனையினர்,பிரதேச செயலக அதிகாரிகள்,காவல்துறை,நீர்ப்பாசன பணிமனையினர்,கமநலசேவை பணிமனையினர்,கிராம அலுவலகர்,சுற்றாடல் அதிகார சபையின் அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினர் மணல் அகழ்விற்கு வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரங்களுக்கான கள ஆய்வினை வசந்தபுரம் கிராமத்தில் உள்ள பேராற்று பகுதிக்கு சென்று மேற்கொண்டுள்ளார்கள்.
கள ஆய்வினை தொடர்ந்து மாவட்ட செயலத்தில் மேலதிக மாவட்ட செயலர் தலைமையில் கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில் மணல் அகழ்வு செயற்பாடு மற்றும் அதனால் ஆற்றில் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.
ஆறு ஆழமாக காணப்பட்டுள்ளமையினை கருத்தில் கொள்ளப்பட்டுள்ளதுடன் குறித்த ஆற்றில் மணல் இல்லாத நிலை காணப்படுகின்றது ஆற்றில் போதியளவு மணல் நிரம்பும் வரை வசந்தபுரம் பேராற்று பகுதியில் மணல் அகழ்வு தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. பின்னர் ஆவணி மாதத்தில் மீண்டும் ஒரு கள விஜயத்தினை மேற்கொண்டு மணல் அகழ்விற்கான அனுமதி வழங்குவதா இல்லையா என்பது தொடர்பில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த காலத்தில் வசந்தபுரம் பேராற்று பகுதியில் நான்கு பேருக்கு மணல் அகழ்வுக்கான அனுமதி வழங்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.(ப)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.