செல்வன்.
வரலாற்று சிறப்பு மிக்க முல்லைத்தீவு முள்ளியவளை காட்டுவிநாயகர் ஆலயத்தின் கும்பாபிஷேகம் 14ஆம் திகதி கர்மாரம்ப கிரியைகளுடன் ஆரம்பமாகி சிறப்புற நாளை புதன்கிழமை(20) இடம்பெறவுள்ளது.
வெள்ளைக்கை நாச்சியாரால் வழிபட்டதும் பரராசசேகர மன்னரால் பல திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டதுமான முள்ளியவளை காட்டு விநாயகப்பெருமானுக்கு ஒன்பது தளங்கள் கொண்ட இராஜகோபுரம் புதிதாக அமைக்கப்பட்டு புனருத்தாபன பணிகள் மேற்கொள்ளப்பட்டு கும்பாபிஷேகம் நாளை நடைபெறவுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் வரலாற்று சிறப்புபெற்ற ஆலயமாக காணப்படுகின்றது. உப்பு நீரில் விளக்கெரியும் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வைகாசி விசாக பொங்கலுக்குரிய பாக்குத்தெண்டல் என்ற நிகழ்வும் கடல் நீரில் தீர்த்தம் எடுக்கும் நிகழ்வும் தொடர்ச்சியாக ஏழு நாட்களுக்கு உப்பு நீரில் விளக்கெரியும் நிகழ்வு இடம்பெற்று ஞாயிற்றுக்கிழமை காட்டுவிநாயகர் பொங்கல் நடைபெற்று திங்கட்கிழமை மடப்பண்டத்துடன் எடுக்கப்பட்ட கடல்தீர்த்தமும் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயம் கொண்டு செல்லப்பட்டு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பொங்கல் நிகழ்வு நடைபெறும் இவ்வாறு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்துடன் தொடர்புடைய சிறப்புமிக்க தொன்மைகொண்ட ஆலயமாக முள்ளியவளை காட்டுவிநாயகர் ஆலயம் காணப்படுகின்றது.
இந்த ஆலயம் கடந்த 2017ஆம் ஆண்டு பாலஸ்தானம் இடம்பெற்று திருப்பணிவேலைகள் நடைபெற்றன. நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட்19 காலகட்டமான இரண்டு ஆண்டுகள் அதன் பின்னர் போக்குவரத்து தடை, எரிபொருள் விலையேற்றம் போன்ற காரணங்களினால் மூன்று ஆண்டுகள் திருப்பணிவேலைகள் நடைபெறாத நிலையில் அதன் பின்னர் திருப்பணிவேலைகள் பக்தர்கள் மற்றும் புலம்பெயர் பக்தர்களின் ஒத்துளைப்புடன் நிர்வாகத்தினரின் செயற்பாடு காரணமாக ஆலையம் முழுமையாக புனருத்தாபனம் செய்யப்பட்டு நவதள இராஜகோபுரம் புலம்பெயர்ந்த கொடையாளர் சிவராசாவினார் நிர்மானிக்கப்பட்டு நாளை(20) மஹாகும்பாபிஷேக பெரும் சாந்தி விழா சிறப்புற நடைபெறவுள்ளது.
நடைபெற்று வரும் கும்பாபிஷேக நிகழ்வுகளில் முல்லைத்தீவு மாவட்டத்தின் முதன்மை குருக்கள் உள்ளிட்ட பல்வேறு குருக்களின் வேத பாராணங்கள் ஓதலுடன் கும்பாபிஷேக கிரியைகள் நடைபெற்று வருகின்றது. (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.