(செல்வன்)
காட்டுவிநாயகர் ஆலய மஹா கும்பாபிஷேகம் இன்று (20) சிறப்புற நடைபெற்றது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் வரலாற்று சிறப்பு மிக்க ; முள்ளியவளை காட்டுவிநாயகர் ஆலயத்தின் கும்பாபிஷேகம் (14.03.2024) அன்று கர்மாரம்ப கிரியைகளுடன் தொடங்கி சிறப்புற நடைபெற்று (20) இன்று கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
வெள்ளைக்கை நாச்சியாரால் வழிபட்டதும் பரராசசேகர மன்னரால் பல திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டதுமான முள்ளியவளை காட்டுவிநாயகப்பெருமானுக்கு ஒன்பது தளங்கள் கொண்ட இராஜகோபுரம் புதிதாக அமைக்கப்பட்டு புனருத்தாபன பணிகள் மேற்கொள்ளப்பட்டு கும்பாபிஷேகம் இன்று (20) திகதி நடைபெற்றது.
.
முள்ளியவளை காட்டுவிநாயகர் ஆலயம் முல்லைத்தீவு மாவட்டத்தில் வரலாற்று சிறப்பு பெற்ற ஒரு ஆலயமாக காணப்படுகின்றது.
வைகாசி விசாக பொங்கலை முன்னிட்டு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு எடுக்கப்படும் கடல் தீர்த்தம் ஏழு நாட்கள் முள்ளியவளை காட்டு விநாயகர் ஆலய அம்மன் சன்நிதானத்தில் அணையா விளக்காக எரியும் இவ்வாறான அற்புதங்கள் நிறைந்த முள்ளியவளை காட்டுவிநாயக பெருமானுமக்கும் ஏனைய பரிவார மூர்த்திகளுக்கும் இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இந்த ஆலயம் கடந்த 2017 ஆம் ஆண்டு பாலஸ்தானம் இடம்பெற்று இன்று (20) கும்பாபிஷேகம் சிறப்புற நடைபெற்றுள்ளது.
ஆலயம் முழுமையாக புனருத்தாபனம் செய்யப்பட்டு நவதள இராஜகோபுரம் புலம்பெயர்ந்த கொடையாளர் சந்திரசேகரம் சிவசராசா (செல்லம்மா இல்லம்) குடும்பத்தினரால் நிர்மானிக்கப்பட்டு (20.03.2024) கும்பாபிஷேக பெரும் சாந்தி சிறப்புற நடைபெற்றுள்ளது.
மூலாலய பிரதிஷ்ட பிரதம குருவாக ஈசான சிவாச்சாரியார் சிவஸ்ரீ கா.இரகுநாதகுருக்கள் தலைமையில் வடக்கில் உள்ள பல முதன்மை குருமார்களின் பங்குபற்றலுடன் ஆலய கிரியைககள் நிறைவுபெற்று கும்பாபிஷேக நாளான இன்று (20) வானில் இருந்து ரோன் மூலம் ஆலய கோபுரங்களுக்கு பூ தூவ பக்த அடியவர்களின் அரோகரா ஓசை வானைப்பிளக்க கும்பாபிஷேகம் இனிதே நடைபெற்றுள்ளது.
தொடர்ந்து 48 நாட்கள் மண்டலாபிஷேகம் நடைபெற்று மண்டலாபிஷேக பூர்த்தி நாளான 48 ஆவது நாள் 1008 சங்குகளால் சங்காபிஷேகம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.(ப)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.