மாணவனின் மர்ம மரணம் தொடர்பில் சந்தேக நபரான மௌலவியை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு நேற்று புதன்கிழமை(20) கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட நிலையில் மௌலவி உட்பட சிசிடிவி காணொளிகளை அழித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலையாகிய 4 சந்தேக நபர்களும் மன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இதன் போது கடந்த தவணைகளில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி காட்சி உள்ளடங்கிய முக்கிய தடயப்பொருட்களை அழித்த குற்றச்சாட்டு அடிப்படையில் கைதான 4 சந்தேக நபர்களையும் கடும் நிபந்தனையின் கீழ் பிணையில் விடுதலை செய்யப்பட்ட நிலையில் நேற்று மன்றில் ஆஜராகி இருந்தனர். பின்னர் இரு தரப்பினரின் வாதப்பிரதிவாதங்களின் பின்னர் சந்தேக நபரான மௌலவியை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
குறித்த சம்பவத்தில் கடந்த தவணையின் போது 30,26, 23 மற்றும் 22 வயது மதிக்கத்தக்க 4 சந்தேக நபர்களை பிணையில் விடுவித்தல் தொடர்பாக சமர்ப்பணம் மற்றும் குறித்த வழக்கில் பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பாக ஆஜரான சட்டத்தரணி உட்பட ஏனைய தரப்பினரின் விடயங்களை ஆராய்ந்த நீதிவான் நீண்ட சமரப்பணத்தின் பின்னர் மத்ரஸா பாடசாலை மாணவனின் மர்ம உயிரிழப்பு தொடர்பில் சிசிடிவி காட்சி உள்ளடங்கிய முக்கிய தடயப்பொருட்களை அழித்த குற்றச்சாட்டு அடிப்படையில் கைதான 4 சந்தேக நபர்களை தலா 10 இலட்சம் ரூபா சரீர பிணை எனும் அடிப்படையில் மாதம் இறுதியில் வரும் ஞாயிற்றுக்கிழமை சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தில் கையொப்பம் இடுதல், வெளிநாட்டு பயணத்தடை, கடவுச்சீட்டு நீதிமன்றில் பாரப்படுத்தல், குறித்த வழக்கு தவணைகளில் தவறாது ஆஜராகுதல், உள்ளிட்ட பிணை நிபந்தனை விதிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டிருந்தனர்.
மேலும் மற்றுமொரு சந்தேக நபரான மௌலவிக்கு விளக்கமறியல் நீடிக்கபட்டு எதிர்வரும் ஏப்ரல் 03ஆம் திகதி வரை வழக்கினை ஒத்தி வைக்குமாறு கல்முனை நீதிவான் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்தியின் பின்னணி:
13 வயது சிறுவன் சடலமாக மீட்பு-குர்ஆன் மதரஸா நிர்வாகி கைது-சாய்ந்தமருது பகுதியில் சம்பவம்
அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது சந்தை வீதியில் அமைந்துள்ள 3 மாடி கட்டடம் ஒன்றில் நடாத்தப்படும் மத்ரஸா ஒன்றில் கடந்த செவ்வாய்க்கிழமை(5) மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி பகுதியை சேர்ந்த எம்.எஸ். முஸ்அப் (வயது-13) எனும் கல்வி கற்று வந்த மாணவனே தூக்கில் தொங்கிய நிலையில் மலசலகூடத்தில் உயிரிழந்த நிலையில் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.
மத்ரஸாவில் மஹ்ரீப் தொழுகைக்கு ஏனைய மாணவர்கள் கலந்து கொண்ட நிலையில் மரணமடைந்த மாணவன் அங்கு காணப்படாததன் காரணமாக சில மாணவர்கள் தேடிய நிலையில் மலசல கூடத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் அம்மாணவன் மீட்கப்பட்டு சாய்ந்தமருது பிரதேச மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை உரிரிழந்த மாணவனின் பெற்றோர் உறவினர்கள் தூக்கில் தொங்குவதற்கு எமது பிள்ளை கோழையல்ல எனவும் ஏதோ ஒன்று நடைபெற்றுள்ளதை ஊகிக்க முடிவதாகவும் முறையான விசாரணை அவசியம் என கேட்டுக்கொண்டனர்.
இதனை அடுத்து மத்ரஸா மாணவனின் உயிரிழப்பில் சந்தேகம் என குறித்த மத்ரஸாவினை சுற்றி பொதுமக்கள் குவிந்தமையினால் சாய்ந்தமருது பொலிஸ் பொறுப்பதிகாரி சம்சுதீன் தலைமையிலான பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று நிலமையை கட்டுப்பாட்டினுள் கொண்டு வந்தனர்.
மேலும் குறித்த மாணவனின் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக பொதுமக்கள் ஒன்று கூடி குறிப்பிட்ட மதர்ஸாவின் நிர்வாகி மீது தாக்குதல் மேற்கொள்ள தயாராகிய வேளை மேலதிக பொலிஸார் அவ்விடத்திற்கு அழைக்கப்பட்ட நிலையில் சாய்ந்தமருது பொலிஸாரால் மதரஸா நிர்வாகியாகிய மௌலவி கைது செய்யப்பட்டு அழைத்து செல்லப்பட்டார்.
இது தவிர குறிப்பிட்ட மதர்ஸாவின் நிர்வாகி மீது ஏற்கனவே பல பொலிஸ் முறைப்பாடுகள் இருப்பதாகவும் மாணவனின் உயிரிழப்பு தற்கொலையல்ல என கூறி பொதுமக்கள் குழப்பத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது. (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.