புகழேந்தி
காட்டு விலங்குகளை வேட்டையாடும் கும்பல்களால் கால்நடைகள் கொத்துக்கொத்தாக கொன்றொழிக்கப்படும் அவலம் நடந்து வருவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய் பகுதியிலேயே, காட்டுக்கு மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகள் கொல்லப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் உரிய தரப்புக்களுக்கு தெரியப்படுத்தியும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
நாளாந்தம் ஐந்து , ஆறு மாடுகள் இவ்வாறு கொல்லப்படுவதாகவும் கால்நடை வளர்ப்போர் கவலை வெளியிட்டுள்ளனர்.
காட்டு விலங்குகளை வேட்டையாடுவதற்காக மரங்களுக்கு இடையில் கேபிள் கட்டி விட்டுச் செல்லும் விசமிகள், அவற்றை அகற்றுவதில்லை.
இதனால், மேய்ச்சலுக்குச் செல்லும் கால்நடைகள் அவற்றில் சிக்கி உயிரிழப்பதாகவும், பெருங்காயங்களுடன் சில வேளைகளில் தப்பி வருவதாகவும், அவ்வாறு தப்பி வந்தாலும் சில நாட்களிலே உயிரிழந்து விடுவதாகவும் தெரிவித்தனர்.
இன்று மட்டும் 5 மாடுகள் உயிரிழந்து விட்டதாகவும், நாளாந்தம் 15 , 20 லீற்றர் பால் தரும் மாடுகளை பறிகொடுத்து விட்டோம் என்றும் வேதனை வெளியிட்டனர்.
கால் நடைகளுக்கு உரிய மேய்ச்சல் தரை இல்லை. இதனால், காட்டுக்குத்தான் மேய்ச்சலுக்கு விடுகின்றோம்.
அங்கு விலங்குகளை வேட்டையாடும் கும்பல்கள் கட்டிவிட்டு செல்லும் கேபிள்களில் சிக்கி எமது கால்நடைகள் உயிரிழக்கின்றன.
மழைக்காலங்களில் அதிகளவில் கேபிள்கள் கட்டப்படுகின்றன. ஒரு முறை கட்டிய கேபிளை மீண்டும் பயன்படுத்துவதில்லை. இதனால், காட்டின் பல இடங்களில் கேபிள்கள் கட்டப்பட்ட நிலையில் உள்ளன.
உணவைத் தேடிச் செல்லும் கால்நடைகள் அவற்றில் சிக்கி உயிரிழக்கும் அவலத்தை அதிகாரிகளிடம் கூறினால், தங்களுக்கும் அதற்கும் தொடர்பில்லை என்று அலட்சியமாக செயற்படுகின்றனர்.
எங்களின் வாழ்வாதாரத்து என்ன வழி என்று தெரியாமல் தவித்து வருகின்றோம். எங்கள் கால்நடைகளைக் காப்பாற்ற துறைசார் அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். - என கால்நடை வளர்ப்போர் கோரிக்கை விடுத்துள்ளனர். (க)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.