(செல்வன்)
சுதந்திரபுரம் மத்தி பகுதியில் பல இலட்சம் பெறுமதியான மரக்குற்றிகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் நேற்றையதினம் (04) கைது செய்யப்பட்டுள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுதந்திரபுரம் மத்தி பகுதியில் அனுமதி பத்திரம் இல்லாமல் இருபத்தைந்து இலட்சத்திற்கு மேற்பட்ட பாலை, முதிரை, வாகை மரக்குற்றிகளை பலகையாக்கி தனது வீட்டில் மறைத்து வைத்திருந்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் புதுக்குடியிருப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து, சந்தேக நபரின் சுதந்திரபுரம் மத்தியிலுள்ள பத்து ஏக்கர் காணியினை சுற்றிவளைத்து புதுக்குடியிருப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி எம் பி ஆர் கேரத் தலைமையிலான குழுவினர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டட போது குறித்த காணியில் தென்னோலையால் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மர குற்றிகள் மீட்கப்பட்டுள்ளதுடன், மரம் அறுக்க பாவித்த இயந்திரம் (செயின்சோவர்) மூன்றும் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்தில் 29 வயது மதிக்கத்தக்க உடையார்கட்டு மூங்கிலாற்றை சேர்ந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன் கைது செய்யப்பட்ட மரக்குற்றிகளையும், சந்தேக நபரையும் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர். (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.