புதியவன்
அங்கவீனமுற்ற இராணுவ வீரர்களின் பாதுகாப்பு மற்றும் நலனுக்கு அரசாங்கத்தால் முடிந்த அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என அரச தலைவர் ரணில் விக்ரமசிங்க
உறுதியளித்தார்.
போரினால் பாதிக்கப்பட்ட இராணுவத்தினருக்கு மின்சார உந்துருளிகள் வழங்கும் நிகழ்வு, ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டையில் அமைந்துள்ள பாதுகாப்பு அமைச்சின் தலைமையகத்தில் இன்று நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அரச தலைவர் மேற்கண்டவாறு வாக்குறுதி வழங்கினார்.
அங்கவீனமுற்ற இராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தாரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், 17 மில்லியன் ரூபா செலவில் 50 மின்சார உந்துருளிகள் இதன்போது வழங்கப்பட்டன.
நிகழ்வில் அடையாள அம்சமாக அங்கவீனமுற்ற இராணுவ வீரர்கள் சிலருக்கு அரச அதிபரால் மின்சார உந்துருளிகள் வழங்கி வைக்கப்பட்டன.
இவ்வாறு இராணுவ வீரர்களுக்கு மின்சார உந்துருளிகள் வழங்கி ஊக்குவிப்பதன் மூலம் அவர்களின் தொழில் முயற்சியை மேம்படுத்த முடியுமென இராணுவச் சேவை அதிகார சபை நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த அரச தலைவர் ரணில் விக்ரமசிங்க: நாட்டின் ஒருமைப்பாட்டையும், சுயாதீனத் தன்மையையும் பாதுகாக்க உயிரைப் பணயம் வைத்து போராடிய இராணுவ வீரர்களுக்கு நன்றி கூறினார்.
அங்கவீனமுற்ற இராணுவ வீரர்களுக்கான மேலும் 76 மின்சார உந்துருளிகளைக் கொள்வனவு செய்வதற்கான நிதி ஒதுக்குவதாக உறுதியளித்த அரச தலைவர், மற்றைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு இராணுவ வீரர்களின் நலனுக்காக உயர்வான அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் குறிப்பிட்டார்.(க)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.