தயாராகின்றன தொழிற்சங்கங்கள்
(ஆதவன்)
தமிழ் சிங்கள புத்தாண்டுக்குப் பின்னர் நாடு முழுவதும் வேலைநிறுத்தப் போராட்டங்களை முன்னெடுப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.
கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, கிராம அலுவலர் உள்ளிட்ட பல்வேறு அரச துறையை உள்ளடக்கிய தொழிற்சங்கங்களால் இந்த வேலைநிறுத்தப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வேலைநிறுத்த போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளது என்று இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தெரிவித்துள்ளது. சம்பள முரண்பாட்டைத் தீர்த்தல், கல்விச் சுமையை பெற்றோரிடம் இருந்து அகற்றுதல், கற்றல் உபகரணங்களின் விலையைக் குறைத்தல், ஆசிரியர் மற்றும் அதிபர்களுக்கு பதவி உயர்வு வழங்குத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
அதேவேளை, சுகாதார அமைச்சு உறுதியளித்த படி, சுகாதார சங்கங்களின் கொடுப்பனவு பிரச்சினைக்குத் தீர்வுகாண சுற்றறிக்கை வெளியிடப்பட வேண்டும் எனவும், அவ்வாறு இல்லாத நிலையில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ள தாகவும் சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
அரசாங்கத்தின் அரிசி விநியோக வேலைத்திட்டம் உள்ளூர் அரசியல்வாதிகளின் தலையீடு இன்றி முன்னெடுக்கப்படும் என அரசதலைவர் உறுதியளிக்காவிட்டால், கிராம உத்தியோகத்தர்கள் அந்த வேலைத் திட்டத்திலிருந்து விலகிக்கொள்வதற்குத் தீர்மானித்துள்ளனர்.
இலங்கை போக்குவரத்துச்சபை ஊழியர்களின் நிலுவைத் தொகையை வழங்குவதாக எழுத்து மூலம் உறுதியளித்துள்ளபோதிலும் இதுவரை வழங்கப்படவில்லை எனவும், கொடுப்பனவுகள் வழங்கப்படாவிட்டால் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பிக்க வேண்டியிருக்கும் என்றும் அகில இலங்கை போக்குவரத்து ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.