வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு!
செல்வன்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாயில் கடந்த ஆண்டு ஜூன் 29ஆம் திகதி கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி அகழ்வு வழக்கானது இன்று திங்கட்கிழமை(04) முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றில் இடம்பெற்றது.
முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றில் நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் இடம்பெற்ற வழக்கு விசாரணைகளில் முல்லைத்தீவு மாவட்ட சட்ட மருத்துவ அதிகாரி கனகசபாபதி வாசுதேவா, முல்லைத்தீவு மாவட்ட செயலக பிரதம கணக்காளர் மயில்வாகனம் செல்வரட்ணம், கொக்கிளாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, கொக்கிளாய் கிராமஅலுவலர், சட்டத்தரணிகளான வீ.எஸ். நிறஞ்சன், கணேஸ்வரன், தனஞ்சயன், ருஜிக்கா ஆகியோர் முன்னிலையாகியிருந்தனர்.
குறித்த வழக்கின் அகழ்வு பணியினை திட்டமிட்டபடி நடாத்த நிதி கிடைக்கபெறவில்லையென தெரிவிக்கப்பட்ட நிலையில் குறித்த வழக்கு அடுத்தமாதம் 4ஆம் திகதிக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மேலும், முல்லைத்தீவு- கொக்குதொடுவாயில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழியின் முதல் கட்ட அகழ்வானது கடந்த ஆண்டு ஜூன்09ஆம் திகதி ஆரம்பமாகி பதினொரு நாட்கள் நடைபெற்று 17 உடற்பாகங்கள் மீட்கப்பட்ட நிலையில் இடைநிறுத்தப்பட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக மீண்டும் அகழ்வின் இரண்டாம் கட்ட பணிகள் கடந்த ஆண்டு நவம்பர் 20ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு ஒன்பது நாட்கள் தொடர்ச்சியாக நடைபெற்று 40 எலும்புக்கூட்டு தொகுதிகள் மீட்கப்பட்டுள்ளதுடன் இரண்டாம் கட்ட அகழ்வுபணி இடைநிறுத்தப்பட்டிருந்தது. அத்தோடு அகழ்வு ஆய்வு நடவடிக்கையின் இறுதி நாட்களில் மேற்கொள்ளப்பட்ட ஸ்கான் பரிசோதனை மூலம் மனித புதை குழிக்கு மேற்கு பக்கமாக இரண்டு மீட்டர் நீளத்திற்கு உடலங்கள் காணப்படுவதாக பரிசோதனை மூலம் கண்டறியப்பட்டிருந்தது.
அதனையடுத்து அகழ்வுப்பணியின் மூன்றாவது கட்டம் இவ்வருடம் மார்ச் மாதம் நடைபெற திட்டமிடப்பட்டிருப்பதமையும் குறிப்பிடத்தக்கது . (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.