எழிலன்
மன்னாரிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் அகதிகளாக படகில் சென்று இன்று சனிக்கிழமை காலை தனுஷ்கோடி மணல் திட்டில் இறங்கியுள்ளனர்.
இவர்களை மீட்ட இந்தியக் கடற்படையினர் மண்டபம் பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று ஒப்படைத்தனர். அங்கு அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் பொருளாதார நெருக்கடி மற்றும் போதைப்பொருட்களின் பயன்பாடு அதிகரித்து வருவதால் குழந்தைகளுக்குப் பாதுகாப்பு இல்லை. இதனால், தமிழகம் வந்ததாகத் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக தனுஷ்கோடி கடல் வழியாக கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து இலங்கைத் தமிழர்கள் தமிழகத்தில் அகதிகளாக தஞ்சம் அடைந்து வருகின்றனர்.
இந்நிலையில், மன்னர் மாவட்டம் திருக்கேதீஸ்வரம் பகுதியைச் சேர்ந்த முருகானந்தம், அவரது மனைவி ரீட்டா மேரி மற்றும் அவர்களது இரண்டு குழந்தைகள் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் இலங்கையிலிருந்து படகு மூலம் புறப்பட்டு தனுஷ்கோடி முதலாம் மணல் திட்டில் இறங்கியுள்ளனர்.
மணல் திட்டில் நின்று கொண்டிருந்த இலங்கைத் தமிழர்கள் நால்வரை மண்டபம், இந்தியக் கடலோர காவல்படை ஹோவர் கிராப்ட் ரோந்துக் கப்பலில் மீட்டு தனுஷ்கோடி அரிச்சல்முனை கொண்டு சென்று இராமேஸ்வரம் மெரைன் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
இவ்வாறு ஒப்படைக்கப்பட்ட நால்வரையும் விசாரணைக்காக மண்டபம் பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு வந்து மத்திய, மாநில உளவுத்துறை அதிகாரிகள் விசாரணைக்குப் பின்னர் இலங்கைத் தமிழர்களை மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைக்கவுள்ளனர்.
இலங்கையில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக தினசரி ஒரு குடும்பத்தில் ஒரு நேரம் மட்டும் சாப்பிட முடிவதாகவும், இலங்கையில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இச் சூழலில் குழந்தைகளை வைத்துக்கொண்டு பாதுகாப்பாக வாழ முடியாததால் தமிழகத்துக்கு அகதிகளாக சென்றதாக இலங்கைத் தமிழர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன் மூலம் பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையிலிருந்து தமிழகத்துக்கு சென்ற அகதிகளின் எண்ணிக்கை 297 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.(க)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.