இலங்கையில் இடம்பெற்ற 30 ஆண்டுகாலப் போரை வெற்றிகொண்டு பொருளாதாரத்தை முன்னேற்ற முடிந்தமைக்கு. சிறிலங்கா அரசதலைவருக்கு இருந்த நிறைவேற்று அதிகாரங்களே தலைமை காரணம் என்று தெரிவித்திருக்கின்றார் அரசதலைவ ரணில் விக்கிரமசிங்க. சிறிலங்காவில், அரசதலைவருக்கு உள்ள நிறைவேற்று அதிகாரங்கள் குறைக்கப்பட வேண்டும் என்று காலாகாலமாகவே வலியுறுத்தப்பட்டுவரும் நிலையில், நிறைவேற்று அதிகாரத்துக்கு வக்காலத்து வாங்கியிருக்கின்றார் ரணில், ஒருநாட்டின் அரசதலைவருக்கோ அல்லது தலைமை அமைச்சருக்கோ உலகில் வேறெந்த நாடுகளிலும் இல்லாத அளவுக்கு அதிகாரங்களைக் குவித்துக் கொடுத்திருக்கும் நாடுதான் இலங்கை. அமெரிக்க அரசதலைவருக்கு உரிய அதிகாரங்கள் கூட காங்கிரஸால் கட்டுப்படுத்தப்படுகின்றன. ஆனால், இலங்கை அரசதலைவர் தான் சர்வமும் படைத்தவராக இருக்கின்றார். இதனால் தான், 'என்னால் ஒரு ஆணை பெண்ணாகவும், ஒரு பெண்ணை ஆணாகவும் மாற்றமுடியாதே தவிர, மற்றைய அத்தனையும் சாத்தியம்' என்று இலங்கையின் முதலாவது நிறைவேற்றதிகார அரசதலைவரான ஜே.ஆர். ஜெயவர்த்தன முன்னொரு காலத்தில் குறிப்பிட்டிருந்தார். தன்னை ஜனநாயகவாதியாகவும், சீர்திருத்தவாதியாகவும் காட்டிக்கொள்ளும் அரசதலைவர் ரணில், இப்படியான அர்த்தப் பிறழ்வான அதிகாரக் குவியலுக்கு 21 ஆம் நூற்றாண்டில் வக்காலத்து வாங்குவதெல்லாம் பேரபத்தமே.
அரசதலைவராக கோத்தாபய ராஜபக்ச இருந்த காலத்தில் நாடு உச்சக்கட்டப் பொருளாதாரப் பின்னடைவுக்குள் தள்ளப்பட்டது. பாணுக்கு வரிசையில் நிற்கும் யுகமொன்று ஏற்பட்டது. மக்களின் வயிற்றில் பற்றி யெரிந்த வறுமை எனும் பெரும்தீதான் அவர்களை வீதிக்கு அழைத்துவந்தது. விளைவாக, மக்கள் எழுச்சிப் போராட்டங்களால் நாட்டை விட்டு விரட்டப்பட்டார் கோத்தாபய ராஜபக்ச. இந்தப் பொருளாதாரப் பின்னடைவுக்கு. 'நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி' கோத்தாபய ராஜபக்ச மேற்கொண்ட தன்னிச்சையனதும் -நிபுணத்துவத்தைப் புறக்கணித்ததுமான முடிவுகள்தான் என்பதை அரசதலைவர் ரணிலால் மறுக்கமுடியுமா? இந்த மிகை அதிகாரங்களைக் கொண்டு எடுக்கப்பட்ட 'திருத்தி எழுதப்பட முடியாததும், சவாலுக்கு உட்படுத்த முடியாததுமான அதிகாரங்கள் தான் நாட்டை அதலபாதாளத்துக்குள்தள்ளியிருக்கின்றன. இதை அரசதலைவர் ரணிலே முன்னொரு நேரத்தில் ஏற்றிருக்கையில், தற்போது அவர் தன்நிலைப்பாட்டிலிருந்து முற்றாகத் திரும்புவதன் நோக்கம்தான் என்ன?
சமஷ்டி முறையையும், மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரங்களையும் நாட்டின் அதியுச்ச அதிகாரப் பீடங்களுக்கு வழங்கியிருக்கும் எத்தனையோ நாடுகள் இன்று தம் பாதுகாப்பை மிகையாக உறுதிப்படுத்தி அசைக்கமுடியா அரண்களாக இருக்கின்றன. அவற்றின் பொருளாதாரமும் பலமாகவே இருக்கின்றது. அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து, சுவிற்ஸர் லாந்து, டென்மார்க், சுவீடன் என்றவாறாக இதற் கான உதாரணப் பட்டியல் நீட்சியுறும். அதிகாரங்களை இறுகப்பற்றுவதையும், குவித்து வைத்திருப்பதையும் விடுத்து, அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வுகளையும், வேண்டப்படும் சில தளர்வுப் போக்குகளையும் வழங்குவதன்மூலம் நாட்டின் பாதுகாப்பும் மேம்படும், பொருளாதாரமும் வளம் பெறும், நல்லிணக்கமும் பலப்படும்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.