இந்தியத் தேர்தல் முடிவுகள் இலங்கைக்கு சொல்லும் பாடம்
இந்தியத் தேர்தல் முடிவுகள் இலங்கைக்கு சொல்லும் பாடம்

இந்தியத் தேர்தல் முடிவுகள் இலங்கைக்கு சொல்லும் பாடம் இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் நடந்து முடிந்திருக்கின்றது. ஆளும் பாரதிய ஜனதாக் கட்சியே மூன்றாவது முறையாகவும் ஆட்சி அமைக்க இருக்கின்றது. இந்திய வரலாற்றில் ஜவஹலால் நேருவுக்குப் பின்னர் மூன்றாவது தடவையும் பிரதமராகும் வாய்ப்பு மோடிக்கு கிடைத்திருக்கின்றது. இது பாரதிய ஜனதாக் கட்சியையும், பிரதமர் மோடியையும் பொறுத்த வரையில் வெற்றி என்று சொல்லிக் கொண்டாட முடியாதளவுக்கு களநிலை அமைந்திருக்கிறது. பாரதிய ஜனதாக் கட்சி, கூட்டணிக் கட்சிகளின் ஆதரவின்றி ஆட்சியமைக்கும் எனவும் 543 ஆசனங்களில் 400 ஆசனங்களை இலகுவாகப் பெற்றுக்கொள்ளும் எனவும் சொல்லப்பட்ட நிலையில் தேர்தல் முடிவுகள் அதற்கு நேர்மாறாகவே வந்திருக்கின்றன. பாரதிய ஜனதாக் கட்சி ஆட்சி அமைப்பதற்கு பங்காளிக் கட்சிகளின் தயவில் தங்கியிருக்க வேண்டியிருக்கின்றது.

240 ஆசனங்களையே அந்தக் கட்சியால் தனித்துப் பெற முடிந்திருக்கின்றது. கூட்டணிகளின் ஆதரவுடன் 293 ஆசனங்களைப் பெற்றிருக்கின்றார்கள். மறுபுறம் காங்கிரஸ் கட்சி பாதாளத்திலிருந்து உச்சத்தைத் தொட்டிருக்கின்றது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சியாக வருவதற்குக் கூட முடியாதிருந்த நிலையில் இம்முறை பலமான எதிரணியாக வந்திருக்கின்றது. இந்தியாவின் தேர்தல் தொடர்பான கருத்துக் கணிப்புகள், தேர்தலுக்குப் பிந்திய கருத்துக்கணிப்புகள் எல்லாம் தேர்தல் முடிவுகளால் பொய்யாகியிருக்கின்றன. இந்தத் தேர்தலில் தமிழகத்தில் பாரதிய ஜனதாக் கட்சியின் கூட்டணிகளால் ஒரு தொகுதியைக்கூட வெல்ல முடியவில்லை. தி.மு.க. சகல தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருக்கின்றது. தமிழகம் மோடியை ரசிக்கவில்லை என்பதை துலாம்பரமாக எடுத்துக் காட்டுகின்றன இந்த முடிவுகள்.

கடந்த காலங்களைப் போன்று மோடியின் ஆட்சி இனி இருக்கும் என எதிர்பார்க்க முடியாது. பலரின் தயவில் அவர் ஆட்சியை நடத்துவதால் கொஞ்சம் அடங்கிப் போக வேண்டியே இருக்கும். இந்திய மக்கள் தெளிவாகத்தங்கள் முடிவுகளைச் சொல்லியிருக்கின்றனர். இது மோடிக்கான கடைசி வாய்ப்பு என்பதை அவர்கள் வாக்குகளால் சொல்லியிருக்கின்றனர். இனியும் மதவாதத்தை வைத்து அரசியல் செய்யலாம் என்ற நினைப்பில் அவர்கள் குட்டுப் போட்டிருக்கின்றனர். இது இலங்கை ஆட்சியாளர்களுக்கும் தெளிவான செய்தியைச் சொல்லியிருக்கின்றது. இலங்கையும் எப்போதும் தேர்தல் அறுவடைக்காக இனவாதத்தையும், மதவாதத்தையும் தூண்டி விடுவது வழமை. கோத்தாபய ராஜபக்ச அதை வைத்தே ஆட்சியைப் பிடித்தார். தொடர்ந்து வந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் அதை முதலீட்டாக மாற்றியது மாத்திரமல்லாது, சிறுபான்மைக் கட்சிகளின் ஆதரவில்லாது தனிப்பெரும்பான்மையைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். அப்போதுதான் சிறுபான்மைக் கட்சிகளின் கோரிக்கைகளை செவிமடுக்கத் தேவையில்லை என்றும் கூறியிருந்தார். ஆனால் அவரால் இரண்டரை ஆண்டுகளுக்குக்கூட ஆட்சியில் தாக்குப்பிடிக்க முடியவில்லை. எந்தச் சிங்கள மக்களால் அரியணை ஏறினாரோ அவர்களாலேயே விரட்டப்பட்டிருந்தார்.

இலங்கையிலும் அரசலைவர் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடக்கவிருக்கின்றது. வழமை போன்று இம் முறையும் இனவாதத்தை கையிலெடுப்பதற்கு சகல கடும் போக்குவாதிகளும் ஒன்றாகியிருக்கின்றனர். எனவே முன்னரைப் போன்று இதுவரையும் இனவாதத்தை பகிரங்கமாக கொட்டாத ரணில், சஜித், அநுர மூவரும் இனிப் போட்டிபோட்டுக் கொண்டு அதைக் கொட்டக் கூடும். தென்னிலங்கையின் வாக்குவங்கி இனவாதக் கூட்டணியை நோக்கி சரியத்தொடங்கினால் அதைத் தம்பக்கம் இழுக்க இவர்கள் மூவரும் அதற்கு மேலால் இனவாதத்தை விதைக்கவேண்டியிருக்கும். இந்திய மக்களைப் போன்று தென்னிலங்கை சிங்கள மக்களும் இனவாத அரசியல் சகதிக்குள்ளிருந்து வெளியில் வரவேண்டும். அடுத்த தலை முறையாவது அரசியல்வாதிகளின் வாக்குவங்கிக்காக இனவாத நெருப்புக்குள் பலியாகாமல் இருக்கவேண்டும். இந்தியத் தேர்தல் முடிவுகளை, தென்னிலங்கை சிங்கள மக்கள் பாடமாக எடுத்துக்கொண்டால் நல்லம்.

 

#ஆசிரியர்_தலையங்கம் #வாசகர்கடிதம் #உதயன் #eelam #eelamnews #jaffnanews #uthayannews #recentnews #breaking

371 0

Leave a comment

தொடர்புடைய செய்திகள்

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.