[ஆதவன்]
மாவீரர் நாள் நினைவேந்தல் நிறைவுக்கு வந்து ஒரு வாரம் கடந்து விட்டது. ஆனால் மழைவிட்டும் தூவானம் விடாத குறையாக, மாவீரர்நாளால் உண்டான சலசலப்பு மாத்திரம் இன்னமும் குறையவில்லை. மாவீரர் நாளைப் பயன்படுத்தி எப்படி அரசியல் ஆதாயம் தேடலாம்,பெளத்த - சிங்கள மக்களை உசுப்பேத்தலாம் என்று தென்னிலங்கை தினமும் திட்டமிட்டுக் கொண்டிருக்கின்றது. நாடாளுமன்றத்திலும் சரி, அதற்கு வெளியிலும் மாவீரர் நாளை வைத்துக்கொண்டு தென்னிலங்கை அரசியல்வாதிகள் நடத்தும் கூத்துகள் இன்னமும் அடங்குவதாயில்லை. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த தென்னக்கோன், நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச, பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க என்று தொடர்ச்சியாக மாவீரர் நாள் தொடர்பில் பேசி வருகின்றனர். 'மாவீரர் நாளை கடைப் பிடிக்க அனுமதித்தமை கவலைக்குரியது', 'மாவீரர் நாளை கடைப்பிடித்த அனைவரையும் கைது செய்வோம்', ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சி தொடர்ந்தால் புலிகள் மீளுருவாக்கப்படுவர்', 'மாவீரர் நாளை கடைப்பிடித்த அனைவரையும் கைது செய்யுமாறு அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் பணிப்பு' இந்தச் செய்திகளே தென்னிலங்கையில் அண்மைக்கால பேசுபொருள்.
அடுத்த ஆண்டு தேர்தலுக்கு நாடு முழுதும் தயாராகி வருகின்றது. நாட்டின் வங்குரோத்து நிலைமையிலிருந்து
மீட்சியில்லை. பொருளாதார மேம்பாட்டுக்கான திட்டங்களை முன்வைத்து துணிவுடன் முன்னெடுத்துச் செல்வதற்கு யாரும் தயாரில்லை. எனவே அடுத்த ஆண்டு தேர்தலுக்காக மீண்டும் இனவாதத்தைக் கையிலெடுப்பதற்கு தென்னிலங்கை தயாராகிவிட்டது. அதையே இந்தச் செய்திகள் கட்டியம் சொல்கின்றன. விடுதலைப் புலிகளுடனான போரில் வெற்றியீட்டியதை வைத்து ராஜபக்ச குடும்பம் அரசியல் செய்தது. ஒரு கட்டத்தில் புலிகளைப் பயன்படுத்தாமல் அவர்களால் தேர்தலில் வெல்ல முடியாத சூழல் இருந்தது. அதனால் அடிக்கடி ராஜபக்சக்களால் புலிக்கதை சொல்லப்பட்டு வந்தது. இப்போதும் தேர்தல் காய்ச்சல் என்றவுடன் மீண்டும் புலிக்கதை அரங்கில் பேச ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது.
மாவீரர் தினம் தமிழர் தாயகத்தில் அமைதியாக நடந்து முடிந்திருக்கின்றது. மாவீரர் நாள் இங்கு கடைப்பிடிக்கப்பட்டமையால் எந்தவொரு குழப்பமும் ஏற்படவில்லை. சிங்கள மக்கள் மத்தியில் இன முறுகல் தோன்றவில்லை. மாவீரர் நாளைக் கடைப் பிடித்த மக்கள் தங்கள் உறவுகளை அமைதியாக நினைவுகூர்ந்து விட்டு தங்கள் வேலைகளைப் பார்க்கப் போய்விட்டனர். புலிகளை மீளுருவாக்குவது பற்றிச் சிந்திப்பதற்கோ அது தொடர்பான திட்டங்களை முன்னெடுப்பதற்கோ இங்கு எவருமில்லை. ஆனால் சிங்கள அரசியல்வாதிகளே, இங்கு நடக்காத விடயத்தை திரும்பத் திரும்பச் சொல்லி தங்கள் வாக்கு ஆதாயத்துக்காக இவற்றைக்கிளறிக் கொண்டிருக்கின்றனர். மாவீரர்நாளை கடைப்பிடித்தமையால் இலங்கையின் தேசியப் பாதுகாப்புக்கு எந்தவொரு குந்தகமும் ஏற்படவில்லை. மாறாக மாவீரர்தினத்தைக் காரணம் காட்டி தமிழர் தாயகத்தில் பாதுகாப்புக் கெடுபிடிகளைத்தான் ஏற்படுத்தியிருந்தார்கள். இப்படியானதொரு சூழலில் மாவீரர் நாளை வைத்து அரசியல் செய்து சிங்கள மக்களிடத்தில் தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்துவதற்கு சிங்கள அரசியல்வாதிகள் முயல்கின்றார்கள். இந்த நாட்டில் இன்றுவரை தீர்க்கமுடியாத இனப்பிரச்சினைக்கு வித்திட்டதும் இவ்வாறுதான். அமைதியாக இருக்கும் மக்களிடத்தில் தங்களின் வாக்குகளுக்காக இனவாதத்தை விதைத்துவிட்டு இன்றுவரை அதைவைத்தே அரசியல் அறுவடை செய்கின்றனர். இதேபோக்கு இனியும் தொடர்ந்தால், நாடு இப்போதிருப்பதைக் காட்டிலும் மோசமான நிலைக்கே செல்லும். இதை தென்னிலங்கை அரசியல்வாதிகள் உணர்ந்தால் சரி. [எ]
uFEsvoknHSUL
OkufzsCrdEvgyoch
uFEsvoknHSUL
VjtSmkbClBiWuyUw
VlNURxmaTBKyc
VjtSmkbClBiWuyUw
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.