(ஆதவன்)
அரச தலைவர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் (08) நேற்று முன்தினம் கொள்கை விளக்க உரையை நிகழ்த்தியிருந்தார். மிக நீண்ட அவரது உரையில், தன்னால் இந்தநாட்டின் பொருளாதாரம் நிமிர்ந்திருக்கின்றது என்ற சுய புராணமே அதிகமாகத் தெரிந்தது. தனது இந்த முயற்சிக்கு ஏனைய அரசியல் தரப்புகள் ஆதரவளிக்கத் தான்வேண்டும் என்பது போலவே அந்த உரை அமைந்திருந்தது.
பொருளாதார மேம்பாடு மாத்திரமே இந்த நாடு எதிர்நோக்கிக் கொண்டிருக்கக்கூடிய ஒரே சவால் என்பதை அவர் திரும்பத் திரும்ப வலியுறுத்தியிருந்தார். அதைத் தாண்டி வேறு எதுவும் இல்லை என்பதும், பொருளாதாரப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இன்னமும் பல கட்டங்களைக் கடக்க வேண்டியிருக்கின்றது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். குறிப்பாக கடன்களை மீளச் செலுத்தத் தொடங்கும் போது நாடு பெரும் நெருக்கடியைச் சந்திக்கும் என்று குறிப்பிட்டதுடன், ஆட்சியாளர்கள் கடன்களை வாங்கி வாங்கியே குவித்து இந்த நாட்டு மக்களையும் அதற்குப் பழக்கப்படுத்தி விட்டனர் என்றெல்லாம் சுட்டிக்காட்டினார்.
நாட்டின் பொருளாதார மீட்சிக்காக சில திட்டங்களையும் அவர் குறிப்பிட்டார். சுற்றுலாத்துறை ஊக்குவிப்பு விவசாயத்தை நவீனமயப்படுத்தி ஏற்றுமதி ஊடாக அந்தியச் செலாவணி, வெளிநாட்டு முதலீடுகள், மாகாணங்களுக்கு இடையிலான போட்டி உற்பத்தி என்று சில விடயங்களைப் பட்டியலிட்டிருந்தார். இவையெல்லாவற்றையும் முன்னெடுப்பதற்கு இருக்கும் தடங்கல்களை மேலோட்டமாகவே கொள்கை விளக்கவுரையில் குறிப்பிட்டிருந்தார். அதை ஆழ அகலமாக அலசி ஆராய்வதற்கு அவர் விரும்பவில்லை. அதை வேண்டுமென்றே அரச தலைவர் ரணில் விக்கிரமசிங்க தவிர்த்திருந்தார்.
இந்த நாட்டில் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு ஆணி வேராக இருக்கின்ற இனப்பிரச்சினை தொடர்பில், அப்படியொன்று இந்த நாட்டில் இருக்கின்றது என்பது தொடர்பில் அரச தலைவர் ரணில் மூச்சே விடவில்லை. அதற்குத் தீர்வை எட்டாமல் இந்த நாடு பொருளாதாரத்தில் மீட்சியடைவது என்பது சாத்தியமேயில்லாத விடயம். அரச தலைவர் ரணில் தனது கொள்கை விளக்கவுரையில், மாகாணங்களுக்கான நிகழ்ச்சி நிரலில் மேலும் சில அதிகாரங்கள் வழங்குவதன் பொருளாதார ரீதியில் உறுதிப்பாடுடையவை அவற்றை மாற்ற முடியும் என்று கூறுகிறார்.
ஆனால் இப் பிரச்சினைக்கான முழுமையான தீர்வுக்கான யோசனை எதையும் முன்வைக்கவில்லை. கடந்த ஆண்டு சுதந்திரத்துக்கு முன்னர் இனப்பிரச்சினைக்குத் தீர்வுகான காணப்படும் என்று கூறி எதுவுமே நடக்காததால் இம்முறை அது தொடர்பில் அலட்டிக் கொள்ளாமல் விட்டிருக்க கூடும் ஆனால் இனப்பிரச்சினைக்கான தீர்வை காணாமல் பொருளாதார மேம்பாடு என்பதை எட்டவே முடியாது என்பதை மிக நீண்ட பழுத்த அரசியல்வாதியான ரணில் விக்கிரமசிங்க உணர்ந்திருந்தும், அதை வெளிக்காட்டாமல் வெறுமனே பூசி மெழுகுவது பொருந்தப்பாடானதாக இல்லை.
பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள வேண்டும் என்ற உளரீதியான விருப்பு இருக்குமாக இருந்தால், இனப்பிரச்சினைக்கான நியாயமான தீர்வை - தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளும் தீர்வை முன்வைக்க வேண்டும். வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வரவேண்டும் என்பதை திரும்பத் திரும்பச் சொல்லும் இந்த அரசாங்கம், அவர்கள் தங்கள் முதலீட்டுக்கு இந்த நாடு பாதுகாப்பில்லை 'என்பதை உணருவதையும் ஏற்றுக் கொள்ளும் அரசாங்கம், அதற்கான காரணங்களைத் தீர்ப்பதற்கு மாத்திரம் தயங்குகின்றது. பொருளாதார நெருக்கடி தீர்க்கப்படாவிட்டாலும் பரவாயில்லை. தமிழ் மக்களுக்கு எந்தவொரு உரிமையும் வழங்கக்கூடாது என்ற எண்ணம் மட்டும் மேலோங்கி நிற்கின்றமை தெளிவாகவே தெரிகின்றது. அரச தலைவர் ரணிலும் அதற்கு விதிவிலக்கில்லை என்பதைத் தான் அவரது உரை பறைசாற்றியிருக்கின்றது. (ஏ)
(09.02.2024 உதயன் பத்திரிகை)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.