இயற்கையை நீ அழித்தால்...!
இயற்கையை நீ அழித்தால்...!

இலங்கையை சீரற்ற காலநிலை ஆட்டிப்படைக்கின்றது. தென்னிலங்கையில் குறிப்பாக கொழும்பிலும் மலையகத்திலும் மோசமான காலநிலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. வெள்ளப் பேரிடரால் இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 5 பேர் வரையில் காணாமற்போயுள்ளதாகவும் இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. இந்த எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம். கன மழையால் ஆறுகளின் நீர்மட்டமும் அதிகரித்து வெள்ளப்பெருக்கு இடர் ஏற்பட்டுள்ளது. இன்னமும் வெள்ளம் வடியாத நிலையில் மக்கள் வீடுகளைவிட்டு இடம்பெயர்ந்து இடைத்தங்கல் நிலையங்களில் தங்கியுள்ளனர். இந்த வெள்ளப் பெருக்கால் சொத்து அழிவுகளும் ஏற்பட்டுள்ளன. மீட்பு நடவடிக்கைகளில் முப்படையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சேதமடைந்த வீடுகளை மீளவும் அமைத்துக் கொடுப்பதற்கு முப்படையினரும் களமிறக்கப்படுவர் எனவும் இரண்டு மாதங்ளுக்குள் அவை அமைத்துக் கொடுக்கப்படும் எனவும் அரசதலைவர் ரணில் விக்கிரமசிங்க சிறப்பு அறிவித்தலை வெளியிட்டிருக்கின்றார். அத்துடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக உதவிகளை வழங்கவும் அவர் பணித்திருக்கின்றார். அரசதலைவர் தேர்தல் காலம் என்பதால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து உதவிகளும் விரைந்து கிடைக்கப்பெறும் என நம்பலாம்.

ஆனால்இ இந்த இடரால் உயிரிழந்தவர்களின் உயிர்களை மீளக்கொடுக்கமுடியாது. அந்த இழப்பை எவராலும் சரி செய்யவும் முடியாது. 2004 ஆம் ஆண்டு இலங்கையை சுனாமிப் பேரிடர் தாக்கிய பின்னர் இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் இலங்கையில் உருவாக்கப்பட்டது. இடர்களை முற்கூட்டியே கண்டறிந்து இழப்புகளைத் தடுப்பது - தணிப்பதை நோக்கமாகக் கொண்டு இந்தத் பணிமனை உருவாக்கப்பட்டது. அதேபோல செயற்கை நுண்ணறிவுத் துறையில் இன்றைய உலகம் கொடிகட்டிப் பறக்கின்றது. வானிலை எதிர்வுகூறல்களை துல்லியமாக வழங்கக் கூடியளவுக்கு உலகம் போய்க் கொண்டிருக்கின்றது. இப்படியிருந்தும் 15 உயிர்களை இந்த இடர் காவு வாங்கியிருக்கின்றது. இங்கேதான் இயற்கை என்ற சக்திக்கு முன்னால் மனிதனின் கண்டு பிடிப்புகள் உட்பட எல்லாம் தோற்றுப்போகின்றன. இடர் தொடர்பான முன்னெச்சரிக்கைகள் போதுமானளவு விடுக்கப்பட்டிருக்கவில்லை என்ற குற்றச்சாட்டு இப்போது முன்வைக்கப்படுகின்றது. அவை எல்லாவற்றுக்கும் மேலாக ஏற்படப்போகும் பேரிடரை துல்லியமாகக் கணிக்கமுடியவில்லை. எவ்வளவுதான் தொழில்நுட்பம் வளர்ந்திருந்தாலும் பேரிடரை துல்லியமாகக் கணித்து அதைத்தடுக்க முடியவில்லை.

இயற்கையை சீண்டியதன் விளைவுகளை இலங்கை மட்டுமல்ல உலகம் முழுவதும் இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கின்றது. இயற்கை வளங்களை அடுத்த சந்ததிக்கு கையளிக்காமல் முழுவதையும் நாமே நுகர முற்படுகின்றோம். அளவுக்கு அதிகமாக இயற்கை வளங்களை நுகர்வதால்இ இயற்கையின் சீற்றத்தை எதிர் கொள்ள வேண்டியிருக்கின்றது. 'இயற்கையை நீ அழித்தால் இயற்கையால் நீ அழிவாய்' என்பதைப்போலஇ பல தடவைகள் பட்டும் திருந்தாதவனாக மனிதன் இருக்கின்றான்.

இந்தப் பேரிடர் எம்மைத் தாக்காது என்று நாம் நினைக்கமுடியாது. எம்மை நோக்கியும் அது வந்து கொண்டிருக்கின்றது. நாமும் எங்களின் வளப்பாது காப்புக்காக முன்னோர் அமைத்த அரண்களை எல்லாம் தகர்த்துக் கொண்டிருக்கின்றோம். பணத்தை மாத்திரமே குறிக்கோளாகக் கொண்டு பூநகரியில் சிமெந்து தொழிற்சாலை அமைக்க முயற்சிக்கப்படுகின்றது. அனுமதிக்கப்பட்ட அளவை விடுத்து அதிகளவில் மணல் அகழ்வு முன்னெடுக்கப்படுகின்றது. சவுக்கு உள்ளிட்ட மரங்களுக்கு தீ வைத்து அழிக்கின்றோம். இப்படி இயற்கையை நாமும் சீண்டிக் கொண்டுதான் இருக்கின்றோம். இதற்கு மேலதிகமாக அரசியல்வாதிகளும் அவர்களுக்குச் சேவகம் செய்யும் அதிகாரிகளும் இயற்கையை வகைதொகையின்றி அழித்துக்கொண்டிருக்ன்றார்கள். இப்படியான நிலைமை தொடருமானால் உலகில் எங்கோ ஒரு மூலையில் நடக்கும் இயற்கைப் பேரிடர் நாளை எம்மண்ணிலும் நடக்கலாம்.

 

#ஆசிரியர்_தலையங்கம் #வாசகர்கடிதம் #உதயன் #eelam #eelamnews #jaffnanews #uthayannews #recentnews #breaking

326 0

Leave a comment

தொடர்புடைய செய்திகள்

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.