(ஆதவன்)
திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்பார்கள். இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிரான இன ஒடுக்குமுறை -இனவழிப்புக் காரணமாக உயிர்பிழைக்கும் நோக்குடன் வெளிநாடுகளுக்கு தமிழர்கள் ஓடித் தப்பினர். காலாட்டத்தில் வெளிநாட்டுக்குச் செல்வது என்பது ஒரு கட்டாயக் கடமையாகவே மாறி விட்டது. போர்க்காலத்திலும் அதன் பின்னரான காலத்திலும் வெளிநாட்டுக்குச் செல்லும் கனவுடனேயே இளைஞர்கள் பெற்றோரால் வளர்க்கப்படும் துரதிர்ஷ்டமான சூழலே இங்கு அதிகம் நிலவுகின்றது.
2011 -2015 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் அதிகளவானோர் சட்டவிரோதமான வழியில், படகுகள் மூலம் அவுஸ்திரேலியாவுக்குச் செல்லலாம் என நம்ப வைக்கப்பட்டு கொண்டு செல்லப்பட்டனர். இவர்களில் பலர் கடலில் வைத்து கடற்படையால் கைது செய்யப்பட்டு நாட்டுக்கு மீண்டும் கொண்டு வரப்பட்டனர். வெகு சிலரே அவுஸ்திரேலியாவுக்கு அண்மித்த தீவுகளை சென்றடைந்தனர். அவர்களில் மிகச் சிலருக்கே அவுஸ்திரேலியாவுக்கு நுழைவதற்கான அனுமதி கிடைத்தது. பல இலட்சங்களைச் செலவு செய்து ஏமாந்தவர்களே அதிகம். அவுஸ்திரேலிய அரசாங்கம், சட்டவிரோதமாக தனது நாட்டுக்குள் நுழைய முடியாது என்பதை பரப்புரைப்படுத்தினாலும் எம்மவர்களின் வெளிநாட்டு ஆசை முன்பாக அவை ஏறவில்லை. 2016-2020 வரையிலான காலப் பகுதியில் ஐரோப்பிய நாடுகளுக்குள் சட்டவிரோதமாக நுழைவதற்குச் சென்ற எம்மவர்கள் பலர் அங்கு உயிரிழந்த சோகங்கள் அரங்கேறியிருந்தன. எல் லைப் படைகளால் சுட்டுக்கொல்லப்பட்டனர். பல நாள் நடைபயணம், ஆபத்தான வகைகளில் கனரக வாகனங்களில் அடைத்துச் செல்லப்படுதல் என ஐரோப்பிய நாடுகளுக்குள் நுழைவதற்கு முயன்று உயிர் பிரிந்த சோகங்கள் தான் நடந்தன. இப்போது கனடாவுக்குச் செல்லுதல் என்ற அடிப்படையில் பலரும் தங்கள் புலம்பெயர்தலை ஆரம்பித்திருக்கின்றனர். நாட்டின் பொருளாதார நெருக்கடி காரணமாகச் செல்கின்றோம் என்று சொல்லிக் கொண்டாலும், வெளிநாட்டுக் கலாசாரம் எங்கள் மனதில் இன்னமும் ஆழமாக வேரூன்றியிருப்பதுவும் தற்போதைய புலம்பெயர்தலுக்குக் காரணமாக இருக்கின்றது.
இதை வைத்து பணம் உழைக்கும் கூட்டமும் இருந்து கொண்டிருக்கின்றது. எத்தனை தடவைகள் ஏமாந்தாலும் மக்கள் மீண்டும் மீண்டும் வெளிநாட்டு மோகத்தால் பல இலட்சங்களை இழப்பதற்குத் தயாராக இருக்கின்றனர். வடக்கிலுள்ள காவல் நிலையங்களில், அண்மைக்காலமாகப் பதிவாகும் முறைப்பாடுகளில் பிரதான இடத்தைப் பிடித்திருக்கும் சம்பவமாக, வெளிநாட்டுக்குச் செல்வதற்காக முகவர்களுக்கு பணத்தைச் செலுத்தி ஏமாறுவதே இருக்கின்றது. இது தொடர்பில் காவல்துறையினர் மக்களுக்கு பலமுறை அறிவுறுத்தியும் திரும்பத் திரும்ப ஏமாந்து கொண்டேயிருக்கின்றனர். எந்தவொரு நம்பிக்கையும் இல்லாது வெளிநாட்டு மோகத்துக்காக பல இலட்சங்களை இழக்கத் தயாராக இருக்கும் மக்கள் அதை இங்கேயே முதலீடாக்கி வருமானமீட்டத் தயாரில்லை.
தமிழ் அரசியல் தலைமைகளும் இந்த விடயங்கள் தொடர்பில் மக்களை அறிவூட்டுவதில்லை. வெறுமனே அரசியல் தீர்வைப் பெற்றுத் தருவது மாத்திரம் அவர்களது பொறுப்பு அல்ல. எந்த மக்கள் கூட்டத்துக்கு தலைமை தாங்குகின்றனரோ, அவர்கள் வழி தவறாமல் பார்த்துக்கொள்ள வேண்டியதும் அவர்களது கடமையே.
(05.02.2024 உதயன் பத்திரிகை)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.