பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு மே தினத்தன்று அரசாங்கத்தால் உறுதியளிக்கப்பட்ட ஆயிரத்து 700 ரூபா ஊதியம் இன்னமும் மெய்ப்படவில்லை. பன்னாட்டு சந்தையில், தேயிலை விற்பனை வீழ்ச்சியடைந்துள்ளதாகவும், இதனால் அரசு குறிப்பிடும் ஊதியத்தை தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்க முடியாது என்றும் கம்பனிகளின் கூட்டணி அறிவித்திருக்கின்றது. தேவையேற்பட்டால், அரசாங்கத்தினதும் அரசதலைவர் ரணிலினதும் உத்தரவுக்கு எதிராக சட்ட நடவடிக்கையை நாடுவதற்கும் தயங்கப்போவதில்லை என்றும் கம்பனிகள் எச்சரித்திருக்கின்றன. ஆக, தோட்டத் தொழிலாளர்களின் ஊதியம் தொடர்ந்தும் அடி மட்டத்திலேயே இருக்கப்போவதும், இந்தப் பிரச்சினை இன்னும் சிலகாலம் நீடிக்கப்போவதும் இந்த வார்த்தை மோதல்கள் மூலம் பட்டவர்த்தனமாகியிருக்கின்றது.
‘ஓர் உழைப்பாளியின் வியர்வை உலர்ந்துபோவதற்குள் அவனுக்கான ஊதியத்தை வழங்கிவிட வேண்டும்' என்கின்றது விவிலியம். விவிலியம் மட்டுமல்ல உலகிலுள்ள அநேகமான மறைநூல்களும் - அறநூல்களும் இதைத்தான் பறைசாற்றுகின்றன. ஆனால், இந்தச் சித்தாந்தத்துக்கும் மலையக மக்களின் வாழ்வியலுக்கும் கிஞ்சித்தும் பொருத்தமில்லை. உழைப்புக்கேற்ற ஊதியத்தை வழங்குமாறு நெடுங்காலமாக மலையக மக்கள் (தோட்டத் தொழிலாளர்கள்) போராடிக்கொண்டிருக்கின்றனர். அவர்களின் கோரிக்கை இன்னமும் செவிசாய்க்கப்பட்டாகவில்லை. ஊதியம் மட்டுமல்ல. உட்கட்டுமானங்களிலும் மலையக மக்களின் வாழ்வு சங்கடங்கள் நிறைந்ததாகவே அமைந்திருக்கின்றது. லயங்கள் என்று சொல்லப்படக்கூடிய 'பிரிட்டி- ஷார் காலக் குடில்களில்தான் இன்னும் பல்லாயிரம் தோட்டத் தொழிலாளர்கள் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். தனி நிலம், வீடு, கழிப்பறை, கிணறு இவையெல்லாம் இன்றளவும் அவர்களின் கனவுகளே. ஓர் இனக்குழுமம் இருநூறு ஆண்டுகளாக வாழும் ஓர் இடத்தில் பிரதேசத்தில் நாட்டில் இவையெல்லாம் புறக்கணிக்கப்படுவது எவ்வளவு பெரிய அபத்தம்.
தோட்டத்தொழிலாளர்களாக இருக்கட்டும் - இதர மலையகத் தமிழர்களாக இருக்கட்டும் அவர்களும் இந்த நாட்டு மக்களே. அனைத்துவித உரிமைகளுடனும், ஜனநாயக அம்சங்களுடனும் நிம்மதியாகவும் சுபீட்சமாகவும் வாழ்வதற்கு அவர்கள் உரித்துடையவர்கள். சிங்கள- பௌத்த பேரினவாதத்தின் கோரமுகத்தை அறிந்த, அதன் நெருக்குவாரத்தை உணர்ந்த, ஈழத்தமிழர்கள் தங்கள் குரல்களை மலையக மக்களுக்காகவும் உயர்த்த வேண்டும். இன்று தமிழர் தாயகத்தின் எல்லைக்கிராமங்கள் பலவற்றின் இருப்பு மலையக மக்களின் கைகளிலேயே தங்கியிருக் கின்றது. சிங்களப் பேரினவாதத்தின் நில ஆக்கிரமிப்பை எதிர்க்கும் முன்களச் செயற்பாட்டாளர்களாக இன்று மலையக மக்கள் மாறிக்கொண்டிருக்கும் சூழ்நிலையில், அவர்களின் பிரச்சினைகளை எங்களின் பிரச்சினைகளாக நோக்கவேண்டியது ஒருவகையில் கட்டாயக் கடமையுமாகின்றது.
மலையக மக்களின் குருதியை அட்டைகள் மட்டும் உறிஞ்சவில்லை. மாறிமாறி ஆட்சிக்குவரும் அரசாங்கங்களும், மலையகத்தில் ஆதிக்கம் செலுத்தும் அரசியல் கட்சிகளும், பெருந்தோட்டக் கம்பனிகளும்தான் போட்டி போட்டு உறிஞ்சிக்கொண்டிருக்கின்றன. அவ்வாறு உறிஞ்சுபவர்கள் உரிய ஊதியத்தைக் கொடுப்பதற்கும் பின்னடிக்கிறார்கள். மயிலே மயிலே என்றால் மயில் இறகு போடாது. தோட்டக் கம்பனிகளும் அப்படியே. அவற்றைக் கெஞ்சுவதைவிடவும், அந்த நிறுவனங்களுக்கு புரியக்கூடிய மொழியில், போராட்ட வடிவில் பிரச்சினையின் தாக்கத்தை உணர்த்த வேண்டும். அப்படி மலையக மக்கள் போராடும்போது, நாமும் தார்மீக ஆதரவை வழங்கவேண்டும். ஆனால், ஒரு பொதுவேட்பாளர் விடயத்திலேயே ஒன்றுபட முடியாதவர்கள் எப்படி மலையக மக்களின் உரிமைக்காக ஒன்றுபடுவார்கள்? என்ற உண்மை பேரினவாதிகளுக்கு மட்டுமல்ல, பெருந்தோட்ட நிறுவனங்களுக்கும் நன்குதெரியும். அதனால்தான் இன்னமும் அவர்களால் மலையக மக்களின் குருதியை உறிஞ்சமுடிகின்றது. அவர்களின்நினைப்பில் மண்ணள்ளிப் போட்டு, எல்லோரும் முதலில் ஒன்றுபடுவோம். மலையக மக்கள் 'அரகலய' போல தொடர்ச்சியான, ஒன்றுபட்ட போராட்டத்தை நடத்தினாலேயே அவர்களுக்குக் கிடைக்கவேண்டிய நியாயமான ஊதியமாவது கையில் வரும்...!
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.