சிறிலங்காவின் மிகப்பிரபலமான காலணி தயாரிப்பு நிறுவனமொன்று தனது தயாரிப்புகளில் (காலணிகளில்) கார்த்திகைப்பூவை பொறித்து அதை விற்பனைக்கும் விட்டிருக்கின்றது. கார்த்திகைப் பூவென்பது சிறிலங்காவின் தேசிய மலரல்ல. சிங்கள மக்களின் சித்தாந்தங்களுடன் தொடர்புடையதும் அல்ல. ஆனால், இதே நாட்டுக்குள் வாழ்ந்து கொண்டிருக்கும் இன்னோர் இனக்குழுமத்தின் உணர்வுடன் தொடர்புடைய விடயம் அது, என்ற குறைந்தபட்சப் புரிதல் அந்த நிறுவனத்துக்கு இல்லாமலிருக்க வாய்ப்பில்லை.
சிறிலங்காவில் புத்தபெருமானின் உருவத்தை உடலில் பச்சை குத்தியவர்களும், பௌத்த சின்னங்கள் அச்சிட்ட ஆடைகளை அணிந்தவர்களும் பௌத்தத்தை அவமதித்ததாக, பௌத்த மதத்தினரின் மனதைப் புண்படுத்தியதாக பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, சிறிலங்காவின் நீதிக்கட்டமைப்பின் அடிப்படையில் நீதிமன்றங்களால் தண்டிக்கப்பட்டிருக்கின்றார்கள். சிறிலங்காவின் நீதிக்கட்டமைப்பில் கார்த்திகைப்பூவுக்கு எந்தவொரு அரச அங்கீகாரமும் இல்லையென்ற போதிலும், ஒரு மக்கள் கூட்டத்தின் உணர்வு புண்படுத்தப்பட்டிருக்கின்றது என்பது பொதுமைப்பாடான விடயமே. ஆதலால் தமிழர்களின் மனோ நிலையை, வலியை அந்த நிறுவனம் புரிந்துகொள்ள வேண்டும்.
வடக்கு மாகாணத்தில் இடம்பெற்ற பாடசாலை இல்ல மெய்வன்மைப் போட்டிகளில், கார்த்திகைப் பூவை அலங்கரித்தமைக்காக பாடசாலைகளின் நிர்வாகங்கள் விளக்கத்துக்கு உள்வாங்கப்பட்டமையும், புலனாய்வுப் பார்வை பாடசாலைகளில் பாய்ச்சப்பட்டமையும் யாவரும் அறிந்ததே. புலிகளின் தேசிய அடையாளங்களில் ஒன்றாக இருக்கும் அந்தப்பூ, வரலாற்று நினைவூட்டல்களை வழங்கிவிடும் என்ற பதற்றம் தான் இந்த நடவடிக்கைளின் பின்னுள்ள ஒரே விடயம். இவ்வாறிருக்கையில், மேற்படி காலணிகளில் கார்த்திகைப்பூ பொறிக்கப்பட்டமையையும் பொலிஸார் உடன் அறிந்து அவற்றை சந்தையில் இருந்து அப்புறப்படுத்தியிருக்கவேண்டும். அதைச் செய்யாதபட்சத்தில் வலியையும், வேதனையையும், ஆற்றாமையையும் தமிழர்களுக்கு வலிந்து திணிக்கும் ஒரு முயற்சியாக இதைக் கொள்வதில் தப்பில்லை. நியாயமான சந்தேகங்களின் பாற்பட்டு இத்தகைய எண்ணவோட்டத்தை எண்ணிக்கொள்ள முடிகின்றதல்லவா?
உண்மைக்கும், நல்லிணக்கத்துக்குமான ஆணைக்குழுவை அமைத்து, நாட்டின் இனப்பிரச்சினைக்குத் தீர்வைக் காண்பதில் உறுதியாக இருப்பதாக மீண்டும் மீண்டும் தெரிவித்துவரும் அரச தலைவர் ரணில், இவ்வாறான சீண்டல்களும் தூண்டல்களும் தான் இந்த நாட்டை முப்பது ஆண்டுகால குருதிச் சகதிக்குள் கொண்டு சென்றது என்ற பொதுப்புரிதலை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். நீதியைத் தேடுவதற்கு முன்னர், மீண்டும் நிகழாமையை உறுதிப்படுத்துவது தவிர்க்கப்பட முடியாததே. ஆனால், சிறிலங்கா அரசாங்கத்திடம் இல்லாத விடயமும் அதுவே. கார்த்திகைப் பூவை காலணிகளில் பொறித்த விடயத்தில் அதுவே மெய்ப்படுகின்றது. தமிழர்களின் மனங்களில் ஏற்படுத்திய கிலேசத்துக்காகவும், வலிக்காகவும், தொடர்புடைய நிறுவனம் நிபந்தனையற்ற மன்னிப்பைக் கோரவேண்டும். காலணிகளால் கனன்று கொண்டிருக்கும் நெருப்பு தணிவதற்கு அதுவே ஒரேவழி!
#ஆசிரியர்_தலையங்கம் #வாசகர்கடிதம் #உதயன் #eelam #eelamnews #jaffnanews #uthayannews #recentnews #breaking
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.